ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்தினை பார்வையிட குழுவினர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் அமைக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக் கழகம் எனும் பல்கலைக் கழகத்தினை பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உயர் கல்வி அமைச்சின் குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இப்பல்கலைக் கழகம் தொடர்பாக பாராளுமன்ற உயர் கல்வி அமைச்சின் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி குறித்த பல்கலைக் கழகத்திற்கான வருகை தருவதற்கு இருந்தனர். ஆனால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ் நிலை காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.

இக் குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினரும், உயர் கல்வி அமைச்சின் கோப் குழு தலைவருமான பேராசிரியர் ஆசுமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோகினி விஜயரெட்ண, எஸ்.வியாளேந்திரன், உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சஜிவி கமகே, மகாவலி பிராந்திய முகாமையாளர் எஸ்.திசார ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இதன் போது குறித்த பல்கலை கழகம் தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள சர்சை தொடர்பாக பல்கலைக் கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், பல்கலைக் கழகம் தொடர்பான ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், பல்கலைக் கழக வளாகம் மற்றும் சகல நிர்வாகப் பிரிவுகளையும் பார்வையிடப்பட்டனர்.

முகாமைத்துவ பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லா, பதிவாளர் பி.ரி.ஏ.ஹஸன், உதவிப் பதிவாளர் எஸ்.தர்சிக்கா, கட்டட பொது முகாமையாளர் எம்.தாஹிர் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பல்கலைக் கழகம் தொடர்பாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராய வேண்டியிருக்கின்ற காரணத்தினால் சரியா பாடம் கற்பித்தல், இதற்கான நிதி பெறப்பட்டமை, கட்டடம் அமைப்பதற்காக காணி பெற்றுக் கொண்டமை என்பவை தொடர்பான விடயங்கள் கருத்தில் கொண்டு இக்குழுவினர் கலந்துரையடல்களை மேற்கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலின் போது பல்கலை கழத்தின் ஸ்தாபகர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா பின்வருமாறு குறித்த ஆய்வுக் குழுவிடம் பல்கலைக் கழகம் செயற்படும் தன்மை பற்றி தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்

இப் பல்கலைக் கழகமானது இன்னும் தமது கற்கை நெறிகளை ஆரம்பிக்கவில்லை. எவ்வாறாயினும் இது மாணவர் சமூகத்திற்கு பயனளிக்க வேண்டும். இந்த வகையில் உயர் கல்வி அமைச்சின் அனுமதி வழங்கப்படாத எந்தக் கற்கை நெறிகளும் இங்கு கற்பிக்கப்பட மாட்டாது.

சரியா பாடம் எனும் கற்கை நெறி தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ இவ் பல்கலைகழத்தில் கற்பிக்கப்பட மாட்டாது என்றார். அத்துடன் இவ் விடயங்களை சீர்செய்வதற்கு உயர் கல்வி அமைச்சிலும், பல்கலைகழக மானிய ஆணைக்குழுவிலும் இருந்து ஒவ்வொரு பணிப்பாளர்களை நிரந்தரமாக தனியார் பல்கலைகழக முகாமைத்துவ குழுவில் நியமிப்பதன் மூலம், அவர்கள் ஊடாக பல்கலைக் கழகம் திறன்பட இயங்குகிறது என்பதனையும் கண்கானிக்கவும் முடியும் என்ற கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

மேற்படி கருத்துக்களை செவிமடுத்த ஆய்வுக் குழுவினர் தாங்கள் நேரடியாக வந்து விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஸ்தாபகர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு பாராளுமன்ற குழுவிடம் தங்களது அறிக்கையினை சமர்ப்பிப்பதாக குறித்த கலந்துரையாடலின் போது தெரிவித்தனர்.

அத்துடன் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் கவனமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பல்கலைக் கழகம் எதிர்காலத்தில் செயற்படும் விதம் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பாக விபரங்களையும் குறித்த குழு கேட்டுள்ளதாக பல்கலைக் கழக பதிவாளர் பி.ரி.ஏ.ஹசன் தெரிவித்தார்.

அத்துடன் இன்னும் பல்கலைக் கழகம் ஆரம்ப்பிக்கப்படல்லை இங்கு நாட்டிலுள்ள இன மத வேறுபாடில்லா ஆண், பெண் என இரு சாராருமான மாணவர்கள் கல்வி கற்க முடியும் என்று பதிவாளர் கருத்து தெரிவித்தார்.

குறித்த பல்கலைக் கழகத்தின் ஸ்தாபகர் கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இச் சந்திப்பின் போது கிழக்கு ஆளுநர் என்ற பதவி பதம் இல்லாமல் பல்கலைக் கழகத்தின் ஸ்த்தாபகராகவே பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.