நாட்டில் வறுமை மற்றும் அது போன்ற எந்த துன்பம் வந்தாலும் குற்றச் செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது – கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.றம்சீன் பக்கீர்.

(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களின் கலந்துரையாடல் கூட்டம் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.றம்சீன் பக்கீர் தலைமையில் கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் (25) இடம்பெற்றது.

கல்முனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ. வாஹிட் இக்கூட்டத்தை நெறிப்படுத்தியிருந்தார்.

இங்கு கல்முனை பொலிஸ் நிலையத்தின் சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.றம்ஸீன் பக்கீர்,

நாட்டில் வறுமை மற்றும் அது போன்ற எந்த துன்பம் வந்தாலும் குற்றச் செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது. நாட்டின் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

நான் இங்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளேன். என்றாலும் மக்களோடு மக்களாக இணைந்து மூவின மக்களின் ஐக்கியத்திற்காகவும் பாடுபட நான் விட்டுக் கொடுப்புகளுடன் செயற்பட தயார்.

ஆனால் எக்காரணம் கொண்டும் குற்றச் செயல்களை செய்வதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது. எமது பொலிஸ் துறை சார்ந்தோர் ஏதாவது குற்றம் செய்தாலும் எனக்கு தெரியப்படுத்துங்கள் நிரூபிக்கப்பட்டால் எவ்வித தயவுகளுமின்றி அவர் களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது கல்முனை பிரதேசத்தில் குற்றச் செயல்கள் குறைவடைந்தாலும், இன்னும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையோர் இருந்து கொண்டே இருக்கின்றனர்.
சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற பல குற்றச் செயல்களை நாம் நாளாந்தம் எதிர்கொள்கிறோம்.

எனவேதான், சமூகத்திலுள்ள நாம் அணைவரும் இணைந்து இதனை ஒழிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.