கூட்டமைப்பு பலம் பெற்றால் அதுவே தமிழர்களின் பலமாகவும் அமையும்.இரா.சாணக்கியன்

எதிர்காலத்தினை காக்க நிகழ்காலத்தில் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எதிர்வரும் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.இன்னும் சிலன்நாட்களே உள்ளன.

இந்த தீர்க்கமான கால கட்டத்தில் நாம் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும். நாங்கள் ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் இந்த விடயத்தினை தொடர்ந்தும் கூறி வருகின்றோம்.

மக்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கரங்களை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு பலப்படுத்துவதன் ஊடாகவே எங்களது எதிர்கால இருப்பினை பாதுகாத்த கொள்ள முடியும்.

எமது மக்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஆதரித்து தமது ஏகோபித்த ஆதரவை வழங்கி வந்திருக்கின்றார்கள். நாம் தற்போது நாட்டிலுள்ள அரசியல் நிலைமைகளை அவதானிக்கின்றபோது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியான பயணத்தை முன்னெடுப்பதற்கு மக்கள் மீண்டும் தமது ஆதரவை வழங்க வேண்டும்.
அதிகளவான உறுப்பினர்களின் பலத்துடன் கூட்டமைப்பு நாடாளுமன்றம் செல்கின்ற போதுதான் எம்மால் பேரம் பேச முடியும். எமது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்த முடியும்.

தென்னிலங்கையில் கூட்டமைப்புக்கு எதிராகவே பேசப்படுகின்றது. தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காக வடக்கு, கிழக்கில் அரசின் முகவர்களாகக் களமிறக்கப்பட்டிருப்பவர்களும் அதனையே மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கும் வாக்குகள் கூட்டமைப்பைப் பலப்படுத்தும். கூட்டமைப்பு பலம் பெற்றால் அதுவே தமிழர்களின் பலமாகவும் அமையும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக தமிழ் மக்கள் போடுகின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் எம்மையே முட்டாள்களாக்கி எம்மை அழிப்பதற்றான ஆணையினை நாமே வழங்குகின்ற ஒரு துர்ப்பாக்கிய செயற்பாடாக அது அமையும் என்பதனை மறந்துவிடாதீர்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.