கல்முனை தெற்கில்  ஹோட்டல்கள் விசேட பரிசோதனை

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊடாக பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ. ஆர் .எம் .அஸ்மி தலைமையிலான பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உணவு பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் பெளஸாத், மேற்பார்வை பொதுச் செயலாளர் பரிசோதகர் ஏ.எம்.பாறுக் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதனை குழு மருதமுனை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல்களை சுற்றி வளைத்து உணவு பாதுகாப்பு தொடர்பான பரிசோதனைகளில் (27) ஈடுபட்டனர், இதன் போது உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட மூன்று ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு எதிராக கல்முனை  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தற்போது முஸ்லிம்களின் புனித ரமலான் காலம் என்பதால் பள்ளிவாசல்கள், ஹோட்டல்களில் மாலை நேரங்களில்  உணவு பண்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்த உணவுகள் உற்பத்தி செய்யப்படுகிறதா?   பண்டங்களின் சேர்மானங்கள், கலவைகள் குறித்தும் நஞ்சுத் தன்மையற்ற உணவு உற்பத்தி தொடர்பிலும் இங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன

ஹோட்டல் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதோடு சில கடை உரிமையாளர்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதனைகளால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் வைத்து அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர்.