தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை – சுயேற்சை வேட்பாளரை களமிறக்கும் தலைமன்னார் மக்கள் – கட்டுப்பணத்தினையும் செலுத்தினர்!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக இம்முறை இலங்கை தமிழரசு வடக்கு, கிழக்கில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது. இதன்காரணமாக கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகள் ஒன்றினை புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கி தேர்தலில் போட்டியிடவுள்ளன.

இந்தநிலையில், கட்சிகளுக்குள் ஒன்றுமையில்லாத நிலையில், இனியும் அவர்களை நம்பி பயன் இல்லை என்ற காரணத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள தலைமன்னார் மேற்கினைச் சேர்ந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அதிரடியாக முக்கிய தீர்மானம் ஒன்றினை எடுத்துள்ளனர்.

இதற்கமைய தங்களது ஊர் மக்கள் சார்பாக சுயேட்சை வேட்பாளர் ஒருவரை களமிக்க தலைமன்னார் மேற்கினைச் சேர்ந்த ஊர் மக்கள் தீர்மானித்துள்ளனர்.

இனியும், அரசியல் கட்சிகளை நம்பி எந்த பயனும் இல்லை என்ற காரணத்தினாலேயே தற்போது இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தலைமன்னார் மேற்கினைச் சேர்ந்த ஒருவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இம்முறையும் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையிலேயே, சுயேட்சை வேட்பாளர் ஒருவரை களமிறக்க தலைமன்னார் மேற்கினைச் சேர்ந்த ஊர் மக்கள் தீர்மானித்துள்ளனர்.

இவ்வாறான தீர்மானம் எட்டப்பட்டதன் பின்னரும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், தலைமன்னார் மேற்கினைச் சேர்ந்த சிலரை தனியே சந்தித்து தங்களது கட்ச சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் களமிறங்குமாறு கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், ஊர் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து எடுத்த தீர்மானத்தினை மீற முடியாத தர்மசங்கமான நிலையினை அவர்கள் வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த தகவல்களை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.

இவை எல்லாம் இவ்வாறாக நடந்து கொண்டிருக்கின்ற பின்னணியில் தலைமன்னார் மேற்கினைச் சேர்ந்த ஊர் மக்கள் சார்பில் இன்றைய தினம்(திங்கட்கிழமை) சுயேற்சையாக களமிறங்குவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.