நாமல் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் – விமலவீர திஸாநாயக்க

முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் தன்னைப் போலவே போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடுமையான பட்டினியால் வாடும் நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாத்திரமன்றி, எந்தவொரு நாட்டின் வரலாற்றிலும் ஊட்டச்சத்து குறைபாடு ஓரளவிற்கு இருந்ததாகவும் ஆனால் ஊடகங்களில் அவ்வளவாக செய்திகள் வெளியாகவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இப்போது முட்டை, பால் மா, மீன், இறைச்சி போன்றவற்றின் விலை அதிகமாக இருப்பதாகவும் மக்களால் அவற்றை வாங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தான் மீன்கூட சாப்பிடுவதில்லை என்றும் அதனால் தான் இப்போது ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாகவும் மீனைக் கூட உண்ணாத நாமல் ராஜபக்ஷவும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவையைச் சேர்ந்த பளு தூக்கும் வீரரும் காய்கறிகளை மட்டுமே உண்கிறார் என்றும் அவருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.