அமைச்சின் அனுமதி இன்றி தொழிலாளர்களுக்கு இனி வழக்குகள் போட முடியாது –

 – பெருந்தோட்ட கைத்தொழில் துறை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்

(க.கிஷாந்தன்)

பெருந்தோட்டத் துறையை பூர்வீகமாக கொண்டுள்ள மலையக பெருந்தோட்டப் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர் மற்றும்  பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு அங்கு காணி  மற்றும் வீடு பிரச்சினைகள் தொடர்பில் வழக்குகள் அல்லது விசாரணைகள் இருப்பின் தனிதனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து தனது கவனத்திற்கு கொண்டுவரப்படுமேயானால் அதற்கான தீர்வினை பெற்றுதர தான் தயாராக உள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் துறை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தனது அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விசேடமாக கலந்து பேசப்பட்டு கடந்த இரு தினங்களாக தனக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு நூற்றுக்கு நூறுவீத தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி மற்றும் இருப்பிடம் தொடர்பான பிரச்சனைகள் காணப்படுபவர்களுடனான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதன் போது மேற்படி பிரச்சனை உள்ளவர்களின் பிரச்சனைகள் பலவற்றுக்கு தீர்வு காணப்பட்டன.

இதன் போது அமைச்சின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பாக ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துரைத்ததாவது.

பெருந்தோட்ட காணிகளில் அல்லது வீடுகளில் குடியிருக்கின்ற பெருந்தோட்ட பூர்வீகத்தை கொண்ட மலையக  தோட்ட மக்களுக்கு நிர்வாகத்தினால் அநீதிகள், மற்றும் அசௌகரியங்கள் தொடர்பில்  சட்ட நடவடிக்கைகள் அனைத்திற்கும் தற்போது தீர்வுகள் எட்டப்பட்டு வருகின்றது.

அத்துடன் பெருந்தோட்ட சேவையாளர்கள் அனைவருக்கும்  பெருந்தோட்ட தோட்டப்பகுதிகளில் அவர்களுக்கு காணிகள் மற்றும் வீடுகள் வழங்கவும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்த  அமைச்சர் காணிகள் மற்றும் வீடுகள் தொடர்பில்  சட்ட சிக்கல் உள்ளிட்ட வழக்குகளுக்கு முகம் கொடுப்பவர்கள் இது சம்பந்தமாக குழுவாக அல்லது தனி தனியாக தகவலை தருவார்கலேயானால் அது சம்பந்தமாக  நடைமுறை சாத்தியமாகும் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் தோட்டங்களில் தொழில் செய்பவர்கள் அல்லது தோட்டத்தை விட்டு வெளியிடங்களுக்கு சென்று தொழில் புரிபவர்கள் என்ற வித்தியாசமின்றி மலையக தோட்டங்களை பூர்வீகமாக கொண்டவர்கள் என்ற ரீதியில் அவர்கள் தோட்டப்பகுதியில் வீடுகள்,காணிகள் ஆகியவற்றில் குடியிருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுபட எமது அமைச்சு மூலம் நடவடிக்கைகள்     எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் இவ்வாறானவர்கள் மீது பெருந்தோட்ட அமைச்சியின் கீழ் இயங்கும்  நிர்வாகங்கள் வழக்குகள் தொடரப்பட்டிருப்பின் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதுடன் காணிகள் அற்று இருப்பின் காணிகள் வழங்கவும் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் தீர்மாணத்திற்கும் வந்துள்ளதாக அவர் கூறினார்.

எனவே இந்த தீர்மாணங்களை வெற்றிகரமாக முன்னோடுத்து செல்ல அனைவரினதும் ஒத்துழைப்பை கேட்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.