மட்டக்களப்பு செட்டிபாளயத்தில்  புதிய விளையாட்டு அரங்கம்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு செட்டிபாளயத்தில் கண்ணகி அம்மன் விளையாட்டு மைதானத்தின் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் விழாவானது நியுற்றன் கழகத்தின் தலைவர் எஸ். வேணுகோபாலராஜ் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டு வைத்தார்.இப்பிரதேச  இளைஞர்களின் விளையாட்டு திறனினை ஊக்குவிக்கும் முகமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி சிவப்பிரியா வில்வரெட்ணத்தினால்  ஜனாதிபதி  செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கணபதிபிள்ளை மோகன் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக செட்டிபாளயம் பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு அரங்கு நிர்மாணப்பணியினை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி  செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சுமார் 05 மில்லியன் ரூபாய் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து இத்திட்டத்தை  மேற்கொள்ளவுள்ளார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி காணி விவகார அமைச்சின் செயலாளர் எம்.கோபாலரெத்தினம், பிரதேச சபை செயலாளர், பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.