நூற்றாண்டை நோக்கி இ.கி.மிசன்! அம்பாறையில் சேவை விஸ்தரிப்பு.

(வி.ரி. சகாதேவராஜா)   கிழக்கிலங்கையில் ராமகிருஷ்ண மிஷன் ஆரம்பித்து   98 ஆண்டுகளை பூர்த்தி செய்து 100 ஆண்டுகளை நோக்கி ஜீவ சேவையுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் பொறுப்பேற்ற பிற்பாடு கிழக்கு எங்கும் பலவகையான மக்கள் மைய நலன்புரி வேலைத் திட்டங்கள் முன்னொரு போது மில்லாத வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்திலும் காரைதீவை மையமாக வைத்து பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க பட்டிருக்கின்றன.
அதற்கு முன்னோடியாக காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் சாரதா நலன்புரி நிலையத்தில் புதிதாக காரைதீவு மையமாகக் கொண்டு இலவச மருத்துவ சேவைகளும், நடமாடும் கிராமிய மருத்துவ சேவைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
பிரதி திங்கட்கிழமை புதன்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமை தோறும் மாலை 4 மணி முதல் 6 மணிவரை இம் மருத்துவசேவை இடம் பெற்று வருகின்றது.
அங்கு மருத்துவ ஆலோசனைகள் அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் தொற்றா நோய் பற்றிய விழிப்புணர்வு தற்கொலை தடுப்பு ஆலோசனைகள் போதைப்பொருள் தடுப்பு ஆலோசனைகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் இலவசமாக மருத்துவ முகாம்களை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தெரிவித்தார்.
 அத்தோடு யோக பயிற்சிகள்,இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு நோக்கமாகக் கொண்ட கணினி பயிற்சிகள், தியான வகுப்புகள், செவ்வாய்க்கிழமை தோறும் சத்சங்க வகுப்புகள் ஆகிய ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
 இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உள  அபிவிருத்தி தொடர்பான செயல் நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது என்று சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் மேலும் தெரிவித்தார்.