இறுதிச்சடங்கு செய்ய மயானம் இல்லாத அவலநிலை ! கறுக்காமுனை கிறிஸ்தவர்கள் சிரமத்தில்.

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)திருகோணமலை-வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
கறுக்காமுனை பகுதியில் கிறிஸ்தவர்கள் மரணித்தால் அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லை எனவும் அதனைப் பெற்றுத் தருவதற்குறிய நடவடிக்கையினை  எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.வெருகல் பிரதேசத்தில் பொது மயானம் இருந்தபோதிலும்  இந்து மயானம் என பெயரிடப்பட்டு இந்து மக்களது பூதஉடல்கள்  மாத்திரம் அடக்குவதற்கு  அனுமதி வழங்குவதாகவும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் மரணித்தால் அவர்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் அப்பிரதேச கிருஸ்தவ மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

(05) சுகவீனமுற்ற கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் நல்லடக்கம் செய்வதற்கு பொது மயானத்தில் இந்து மக்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் இதனால் அக்குடும்பம் பல துன்பங்களை எதிர்நோக்கியதாகவும் தெரியவருகின்றது.

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வெருகல் பிரதேசத்தில் கறுக்காமுனை, விநாயகபுரம், ஈச்சிலம்பற்று, இலங்கைத்துறை முகத்துவாரம், வட்டுவான் மற்றும் மாவடிச்சேனை போன்ற பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் வாழ்ந்து வருவதாகவும் கிறிஸ்தவர்கள் மரணித்தால் கிறிஸ்தவர்களது பூதவுடல் நல்லடக்கம்  செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தங்களுடைய மத சுதந்திரத்தை பெற்றுத் தருமாறும் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.

இருந்தபோதிலும் கிறிஸ்தவர்கள் மரணித்தால் அவர்களை நல்லடக்கம் செய்வதற்கு இந்து முறைப்படி செய்தால் மாத்திரமே அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதாகவும், இதனால் தங்களுடைய மத சுதந்திரம் மறுக்கப் படுவதாகவும் கவலை தெரிவிவிக்கின்றனர்.

வெருகல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் கிருஸ்தவ மக்களின் நலன் கருதி மயானம் ஒன்றினை பெற்றுத் தருமாறு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைத்தலைவர் உட்பட அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் இதுவரை தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வித நடவடிக்கையினையும் எடுப்பதாக இல்லையெனவும் குற்றம் சுமத்துகின்றனர்

எனவே கிறிஸ்தவ மதத்தவர்கள் மரணித்தால் அவர்களை புதைப்பதற்காவது மயானம் ஒன்றினை பெற்றுத்தர சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவ் மயான இடப்பற்றா குறையினால் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினை உருவாக்கிவிடாமல் தமக்கென ஒரு மயானத்தினை பெற்றுத்தருமாறு கிறிஸ்தவ மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.