( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் மன்னாரில் பதினாறு சோதனைச்சாவடிகள் போதைப்பொருள் தடுப்பு எனும் போர்வையில் மக்களை அடக்குமுறைக்குட்படுத்துகின்றன. மன்னார் மாவட்ட பொது அமைப்பக்களின் ஒன்றியம் 54 வது படைப்பிரிவின் உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் தர்சன விஜயசேகரவை சந்தித்து இவ் கருத்தை முன்வைத்துள்ளது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் 54 வது படைப்பிரிவின் உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் தர்சன விஜயசேகரவை தள்ளாடி இராணுவ முகாமில் வெள்ளிக்கிழமை (06.05.2022) சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இவ் சந்திப்பைத் தொடர்ந்து பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ் .சிவகரன் தெரிவிக்கையில்
மன்னார் மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் மன்னாரில் பதினாறு சோதனைச்சாவடிகள் போதைப்பொருள் தடுப்பு எனும் போர்வையில் மக்களை அடக்குமுறைக்குட்படுத்துகின்றன.
இவற்றை அகற்றுமாறு பல முறை கோரிக்கை விடுத்தும் தீர்வின்றி தொடர்கின்றன அரச உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எந்த தடையும் இன்றி பயணிப்பதால் சாமானிய மக்களின் அவல நிலை புரியாதவர்களாக இவர்கள் இருந்து வருகின்றனர்.
போதைப்பொருள் தடுப்பு எனும் காரணத்தை வைத்து மன்னார் நுழைவாயில் உள்ள சோதனைச்சாவடி சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்வியல் செயற்பாட்டில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதுடன் அரச தனியார் பணியாளர்கள் குறித்த நேரத்திற்கு கடமைக்கு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுவதுடன் பொருட்கள் இறக்கி ஏற்றுவதால் செலவு அதிகரிப்பதுடன் நேர விரயமும் ஏற்படுகிறது.
பயணிகளை சோதனையில் ஈடுபடும் இராணுவத்தினர் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக தெரிவித்ததுடன் மோட்டார் சைக்கிளின் பக்க கதவுகள் தினமும் கழட்டுவதால் பழுதடைந்து விடுகின்றன என்றும் மேலும் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவற்றுக்கு மன்னார் நுழைவாயில் சோதனைச்சாவடி பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் உள்ளதால் தன்னால் அகற்ற முடியாது என்றும் ஆனால் தங்கள் வேண்டுகைக்கு அமைவாக நுழைவாயில் சோதனைச்சாவடியில் சாதாரண பயணிகள் போக்குவரவை இலகுபடுத்துவதாகவும் அடையாள அட்டை பரிசோதனையை நிறுத்துவதாகவும்
பொருட்கள் இறக்கி ஏற்றுவதற்கு மாற்று வழிகள் மேற் கொள்வதாகவும். காலையில் வேலைக்கு செல்லும் அரச தனியார் பணியாளர்களை விரைந்து விடுவிப்பதாகவும் தமிழ் பேசக்கூடிய இராணுவத்தினரை அதிகம் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபடுத்துவதாகவும் மேஜர் ஜெனரல் தர்சன விஜயசேகர இவ் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்ததாகவும் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ் .சிவகரன் தெரிவித்தார்
இவ் இலகுபடுத்தல் நடைமுறையை கவனிக்குமாறும் இதன் முன்னேற்றம் தொடர்பாக அடுத்த மாதமும் கலந்துரையாடுவதாகவும் இவ் சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டதாக பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ் .சிவகரன் மேலும் தெரிவித்தார்
இச்சந்திப்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சூ. ஜெயபாலன் குரூஸ் அடிகளார் பிரஜைகள் குழுவின் செயலாளர் அ.பத்திநாதன் குரூஸ் உட்பட சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.