தேசியப் பிரச்சினைக்கு தமது தீர்வைத் தராமல் மற்றவர்களின் கருத்தை பிச்சை கேட்கும் ரணிலின் அண்மைய அச்சமூட்டும் கதை

கிராமத்து தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு உணவளிக்க விரும்பும்போது போது அச்சமூட்டும் வெவ்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். பிள்ளையின் முழு கவனமும் கதையில் ஈர்க்கப்பட்ட நிலையில், அம்மா மெதுவாக உணவை ஊட்டுவார். அவர் மீண்டும் உணவளிக்க விரும்பும் போது,  அதே உத்தியைப் பயன்படுத்துகிறார். அச்சமூட்டும் கதை குழந்தைக்கு உணவளிக்கும் வரை மாத்திரமே.
நம்நாட்டு ஆட்சியாளர்களும் தங்கள் இருப்புக்குச் சவால் ஏற்படும்போது கிராமத்துத் தாய்மார்கள் அச்சமூட்டும்  கதைகளை சொல்வது போல், தேசியப் பிரச்சினையை கையில் எடுப்பார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பேன் என மீண்டும் அச்சமூட்டும் கதையை ஆரம்பித்துள்ளார். இந்தக் கதையினால் பலரது கண்கள் மயங்கிவிட்டன என்பது எழுதப்படும் மற்றும் பேசப்படும் விடயங்களில் இருந்து தெரிகிறது.

தேசியப் பிரச்சினைகளின் பின்னணியில் ஜனாதிபதி ரணிலின் அச்சமூட்டும் கதையை ஆராய்ந்தால் ஏன் இப்படி நடக்கின்றது என்பதற்கான ஒரு நெருக்கமான வரைபடத்தை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அது பிரயோசனமாக இருக்குமெனவும் நாம் நம்புகின்றேன்.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர், முதலில் தமிழ் மக்களுக்கு எதிராக பாராபட்சம் காட்ட ஆரம்பித்தது ஐக்கிய தேசியக் அரசாங்கமே. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் தமிழர்களுக்கு எதிராக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பாராபட்சம் காட்டுகின்றன.

அது மாத்திரமல்ல, பல்வேறு காலகட்டங்களில் ஒப்பந்தங்களுக்கு வந்து, ஏமாற்றி வாக்குகளைப் பெற்று, அடித்துக் கொன்று, இறுதியில் இனப்படுகொலை வரை சென்று, வெட்கமின்றி, தாராளமாக, கொடூரமாக, கூட்டாக இதனை செய்திருக்கிறார்கள்.

1947ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், இலங்கை இந்திய காங்கிரஸ் மற்றும் இந்திய காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் ஆகிய இரண்டு கட்சிகள் தோட்டத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டன. இலங்கை இந்திய காங்கிரஸ் மற்றும் இந்திய காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசிய பிரதிநிதிகள்  95 நாடாளுமன்ற ஆசனங்களில் 19 ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்றனர். அந்த அரசாங்கத்தின் பிரதமராக டி.எஸ். சேனநாயக்க தெரிவானார்.

பெருந்தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 19 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு நியமித்தமையை பிரதமர் சேனாநாயக்கவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தமிழர்களின் அதிகாரத்தைக் குறைக்கும் சட்டமூலத்தை 1948இல் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தோட்டத் தமிழர்களின் குடியுரிமையை பறிப்பதற்கான சட்டமூலத்திற்கு ஆதரவாக வடக்கின் மக்கள் பிரதிநிதிகளான சி. சுந்தரலிங்கம் மற்றும் சி. சிற்றம்பலம் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

பத்து இலட்சத்திற்கும் அதிகமான தோட்டத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கின்றது.

மீண்டும் 1949இல், பிரதமர் சேனாநாயக்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலட்சக்கணக்கான தோட்டத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் மற்றொரு சட்டமூலத்தை கொண்டு வந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் மக்களின் தேசிய உரிமைக்கான போராட்டம் ஆரம்பமாகிறது. ஐம்பதுக்கு ஐம்பது நாடாளுமன்றத்தில் சமப்பிரதிநிதித்துவம் கோரி ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைதியான  போராட்டத்தின் முடிவு, தற்கொலை தாக்குதல் நடத்தும் ஆயுதமேந்திய கொரில்லா அமைப்பாக மாறியது.

1956இல் சேனாநாயக்கவின் அரசாங்கங்களுக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டணி சிங்களத்தை மாத்திரமே அரச கரும மொழியாக்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்தது. சேனாநாயக்கவின் தமிழர் விரோத போக்கை ஒரு படி மேலே கொண்டு சென்று பண்டாரநாயக்க சிங்கள பௌத்த இனவாதத்தை முதல் தடவையாக அதிகாரத்தில் இறுத்தினார்.

எனினும் அதன் பின்னர், பெடரல் கட்சி என அழைக்கப்பட்ட, இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகத்துடன் 1957 ஜூலை 29 அன்று  அதிகாரப் பகிர்வு உடன்பாடு எட்டப்பட்டது. இதுவே பண்டா-செல்வா ஒப்பந்தம் என அறியப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இந்த உடன்படிக்கைக்கு எதிராக
கொழும்பில் இருந்து கண்டி வரை தமிழர்களுக்கு எதிரான பேரணி ஒன்றை நடத்தினர்.

இவ்வாறு கொழுந்துவிட்டு எரிந்த இனவெறி தீ கிராமம் நகரம் என நாடு முழுவதும் பரவியது. இறுதியில் சிங்கள பௌத்த தேரர்கள் அலரிமாளியை சுற்றிவளைத்தனர். சிங்கள பௌத்த இனவாதத்தால் அச்சமடைந்த பிரதமர் பண்டாரநாயக்க அவர்கள் முன்னிலையில் ஒப்பந்தத்தை கிழித்து எரிந்தார்.

அந்த ஒப்பந்தத்தை கிழித்து எறியப்பட்டதை அடுத்து பின்வாங்காத, கூட்டாட்சிக் கட்சித் தலைவர் செல்வநாயகம், 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி முதன்முறையாக வடக்கில் தமிழ் அரசை அறிவித்தார். செல்வநாயகத்தின் தொகுதியான காங்கேசன்துறையில் 12 தபால் நிலையங்கள் இருந்ததாகவும், அவற்றிலிருந்து வெளியிடப்பட்ட 2,500 முத்திரைகளும், 3,000ற்கும் மேற்பட்ட தபால் அட்டைகளும் யாழ். கச்சேரிக்கு முன்பாக அரச சின்னங்களாக விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சோசலிச மற்றும் கம்யூனிஸ கட்சிகளை உள்ளடக்கிய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் “சமகி பெரமுன” அரசாங்கப் படைகளை அனுப்பி அனைத்தையும் அழித்தது.

சமகி பெரமுன அரசாங்கத்தின் அரச அடக்குமுறையைக் கருத்திற் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி பெடரல் கட்சியுடன் கைகோர்த்தது. 1965 டட்லி சேனநாயக்க பிரதமராகி தமிழ் கட்சிகளின் உதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தார். எதிர்க்கட்சிகள் இந்த அரசாங்கத்தை ஏழு பேர் கொண்ட கூட்டணி என்று கேலி செய்தார்கள். ஜே.ஆர்.ஜெயவர்தனவையும் உள்ளடக்கிய இந்தக் கூட்டரசாங்கம் 1966ஆம் ஆண்டு எம்.பி.செல்வநாயகத்துடன் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் சமத்துவம் வழங்குவதற்கு உடன்படிக்கையை எட்டியது.

டட்லி-செல்வா என அழைக்கப்படும் இந்த உடன்படிக்கைக்கு எதிராக, சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ் கட்சி கூட்டணி “டட்லிகே படே – மசாலா வடே” என நாடு தழுவிய கலகத்தை ஏற்படுத்தியது. கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற இந்தக் கூட்டமைப்பினரின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தம்பராவே ரதனசார தேரர் கொல்லப்பட்டார். இறுதியில் இந்த ஒப்பந்தம் ஜூலை 1968 இல் இரத்து செய்யப்பட்டது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சராக பதவி வகித்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கம் வடக்கிலுள்ள அனைத்து ஆயுதக் குழுக்களுடனும் அதிகாரப் பகிர்வுக்கான சமாதானப் பேச்சுக்களை நடத்தியது. வடக்கு கிழக்கை தமிழர் தாயகமாக அங்கீகரித்து பூட்டானின் திம்புவில் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்றன. 1985ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை இந்தியாவின் தலையீட்டுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சமாதானப் பேச்சுக்களின் விளைவே போலியோவால் பாதிக்கப்பட்ட மாகாண சபைகள் என்றாலும், மாறாக இது ஜே.ஆர் அரசாங்கமும் ஆயுதக் குழுக்களும் திம்புப் பேச்சுவார்த்தை மூலம் எட்டிய உடன்பாடு அல்ல.

தமிழ் மக்கள் ஒருபோதும் மாகாண சபை அதிகாரத்தை கோரவில்லை. தெற்கில் சிங்கள அரசு  நியமிக்கும் ஆளுநருக்கு அற்ப அதிகாரம் வழங்கப்படுவதற்குக் கூட எதிராகக் கிளர்ந்தெழுந்த சிங்கள பௌத்த இனவாதிகளுக்கு எதிராகவும், மாகாண சபைகளுக்காக ஆதரவாகவும் எழுந்து நிற்பது முற்போக்கான தீர்மானமாகும்.

ஆனால் இன்று மாகாண சபைகள் சீர்செய்யப்பட்டால் அல்லது தமிழ் மக்களுக்கு சேவை செய்யத் தயாராக இருந்தால் அது மிகவும் பிற்போக்கான முடிவாகும்.

இறுதியாக தமிழ் தேசத்துடன் அதிகாரத்தைப் பகிரும் போர் நிறுத்த உடன்படிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. 2002 பெப்ரவரி 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க முழுமையான இணக்கத்தை வெளிப்படுத்தினார்.

எனினும் இரண்டு கட்சிகள் (ஸ்ரீலசுக – ஐதேக) பொன்னான உடன்படிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு ரணில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி செயற்படவில்லை.  வடக்கு, கிழக்கு மாகாணம் தென்னிலங்கை அரசாங்கமும் –  புலிகளும் இணைந்து ஐந்தாண்டு இடைக்கால ஆட்சிக்கு விடுதலைப் புலிகள் முன்வைத்த பிரேரணையை ரணில் நிராகரித்தார்.

அதற்கு பதிலாக, Apex Body எனப்படும் நிர்வாக அமைப்பு முன்மொழியப்பட்டது. மலலசேகர அகராதியில் இதன் சிங்கள மொழிபெயர்ப்பின் பொருள் “உயர் தலைமை குழு” புலிகள் அமைப்பு இந்த பிரேரணையை நிராகரித்தது.

Apex Body நிர்வாக கட்டமைப்பின்படி, வழமை போன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனைத்து அரசியல், பொருளாதாரத் தீர்மானங்களையும் தென்னிலங்கை அரசாங்கங்கமே எடுப்பதோடு, அந்த தீர்மானங்களை விடுதலைப் புலிகளின் கீழ் அமுல்படுத்துவதற்கான அதிகாரத்தை மாத்திரமே வழங்க வேண்டும் எனவும் ரணில் உயர்மட்ட நிர்வாகக் கட்டமைப்பில் இருந்து பரிந்துரைத்திருந்தார்.

இதனுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) 2.5 பில்லியன் கடனாகப் பெறுவதற்காக (இலங்கையை மீட்டெடுப்போம்) Regaining Sri Lanka என்ற அரச சொத்துக்களை தனியார்மயமாக்கும் திட்டத்தையும் பிரதமர் ரணில் முன்வைத்தார். அதில், ரயில்வே திணைக்களத்தை ஒரு அதிகார சபையாக மாற்றும் திட்டம் போன்ற விடயங்கள் இடம்பெற்றிருந்தன.

தனியார்மயமாக்கலுக்கு உழைக்கும் மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்ததோடு  தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டு போருக்குத் தயாராகின.

இந்த நிலையில், அதிகாரப் பகிர்வுக்கான புதிய அரசியலமைப்பையும் ஜனாதிபதி சந்திரிக்கா முன்வைத்தார். அவரது ஜனாதிபதி பதவியை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சரத்தும் புதிய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.

அதிகாரப் பகிர்வை எதிர்த்த ரணிலுக்கு ஜனாதிபதி பதவியை ஆறு மாதங்கள் நீடிக்கும் விடயமானது, பாயும் குரங்கிற்கு ஏணி கொடுத்தது போல் ஆனது. அவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்பை எதிர்த்து நாடாளுமன்றத்தில் காகிதங்களை எரித்து பெரும் அமளியில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தில் ஏற்பட்ட இந்த குழப்பத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட மக்கள் விடுதலை முன்னணி தனியார்மயத்திற்கு எதிராக உழைக்கும் மக்களால் எழுப்பப்பட்ட எதிர்ப்பை பயன்படுத்தி ஜனாதிபதி சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து பதில் அரசாங்கத்தை அமைத்தது. ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், தற்போதைய முன்னிலை சோசலிசக் கட்சியை உள்ளடக்கிய மக்கள் விடுதலை முன்னணி அதிகாரப் பகிர்வு முன்மொழிவுக்கு முட்டுக்கட்டையாகவே செயற்பட்டது.

அதோடு நிற்காமல் கடைசியில் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி போருக்கும் அழைத்துச் சென்றனர். (அவர்களுடைய வார்த்தைகளில் சொல்வதானால் பைத்தியக்கார நாய்களை குளிப்பாட்டுவது போல்) கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் பேரை கொன்று (கனரக ஆயுதங்களால் தாக்கி) யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தலைமையிலான 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை மஹிந்தவின் இராணுவ அரசில் இணைந்து இந்த இனப்படுகொலைப் போருக்கு பங்களிக்குமாறு ரணில் கூறியதாக கரு ஜயசூரியவே கூறுகிறார். அதனை நிரூபிக்க ஏராளமான சான்றுகள் உள்ளன.

1948இல் பெருந்தோட்டங்களில் இருந்து குடியுரிமையைப் பறித்து ஆரம்பித்த சிங்கள, பௌத்த முதலாளித்துவ ஆட்சியாளர்களின் இனவாத அரசியல், 2009 முள்ளிவாய்க்கால் வரை நீடித்தது. அவ்வப்போது நாடளாவிய ரீதியில் வாழ்ந்த தமிழர்களின் இரத்தத்தால் பூமியை நனைத்து.
பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டு, சொத்துக்களை அபகரித்து மற்றும் சொத்துக்களை சுதந்திரமாக எரித்து அழித்து இதனை நிறைவேற்றியது.

எம்.பிகளின் வீடுகளை எரிப்பதையும், எம்.பி.யை வீதியில் கொல்வதையும் பயங்கரவாதமாக பார்க்கும் ரணிலும் அமைச்சர்களும் தமிழர்களை கொல்வதையும், சொத்துக்களை எரிப்பதையும், பெண்களை துஷ்பிரயோகம் செய்வதையும் பயங்கரவாதமாக பார்த்ததில்லை.

இவ்வாறானதொரு சூழலில் ரணில் “போர்வீரர்களுக்கு” சொந்தமான கட்சியின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவாகி, அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசும்போது, ரண ககுளு (රණ කකුළු) பிறந்த கதைதான் நினைவுக்கு வருகிறது.

ஏனெனில் இந்த நேரத்தில் ரணில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறாரா என்று யோசிக்க வேண்டியுள்ளது.

அதிகாரத்தை பகிர்ந்து சந்தையை ஒருங்கிணைக்க வேண்டுமா? தேவையில்லை.
துடுகெமுனு செய்தது போலவே நாடு “ஒருங்கிணைக்கப்பட்டு” காணப்படுகின்றது.
இன்று முழு வடக்கு கிழக்கையும் அரசாங்கத்தின் சிங்கள பௌத்த இராணுவம் கட்டுப்படுத்துகிறது.
அந்த பகுதிகளில் இராணுவமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேசியப் பிரச்சினையைத் தீர்க்காத காரணத்தால் முதலாளித்துவ அமைப்பு நெருக்கடிக்குள் சென்றுவிட்டதா? இல்லை இலங்கையின் இனங்களுக்கிடையில் பிரச்சினையை பிறப்பித்தவர்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களே. அவர்களின் இருப்பு இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது.

2002ஆம் ஆண்டு சந்திரிக்கா ரணில் அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வு விடயத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலையீட்டினாலேயே ரணில் நாசமாக்கினார் என்ற ஒரு அனுமானத்திற்கு வருவோமானால்  2015இல் ஏன் அதனை அவர் செய்யவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை நாசப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இரண்டு கூட்டணி அரசாங்கங்களில் பிரதமராக இருந்து, தற்போதைய கூட்டு அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருக்கும் ரணில், ஒரு அரசாங்கத்தின் புகழ் நீண்ட காலம் நீடிக்காது என்பதையும் கூட்டணி உள்முரண்பாடுகளையும் அறியாத அரசியல் குழந்தையா ரணில்? நாடாளுமன்றத்துக்குத் தேவையான அதிகாரங்களை விரைவாகக் கையகப்படுத்தி, அரசியலமைப்பு மாற்றத்துக்கான கருத்துக்களை நாடு முழுவதும் கேட்டறியும் பணியையே ரணில் செய்தார். நாடு முழுவதும் சென்று வரும்போது அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள். ஜனாதிபதி சிறிசேனவின் தொடர் யோசனைகளை குப்பையில் போட்டார். இப்போது குற்றவாளி யார் சிறிசேன?

ரணில் விக்ரமசிங்க எப்போதும் நல்லவரைப் போலவும் செயற்படுகின்றார், ஏனையவர்கள் பொல்லாதவர்களைப் போலவுமே செயற்படுவார். இதன் காரணமாக புலிகளின் கோட்பாட்டாளர் அன்டன் பாலசிங்கம் ரணிலை “தந்திர நரி” என்று அழைத்தார். எனவே ரணில் ஒரே கல்லில் இரண்டு குருவிகளை கொல்லவில்லை, பல பறவைகளை கொன்றுள்ளார். தடைகள் இருந்தாலும் ரணிலின் நிகழ்ச்சி நிரல் எப்போதும் எப்படியாவது சாத்தியப்படும்.

இந்த நேரத்தில், அரச வளங்களை விற்பனை செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் தயாரித்து வருகிறது. இந்த விடயம் மற்றும் பாதீட்டில் மக்களுக்கு நிவாரணம் வழங்காமைக்கு எதிராக அரசாங்கத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் சுமார் 20 அரசியல் கட்சிகளும் 150 வெகுஜன தொழிற்சங்க அமைப்புகளும் ஏற்கனவே ஒன்றிணைந்துள்ளன. அதிகாரப் பகிர்வு முன்மொழிவு முன்வைக்கப்பட்டவுடன், இந்த ஒற்றுமை துண்டு துண்டாக உடயும். அதனால்தான் பல அமைப்புக்களும் தனிநபர்களும் தேசியப் பிரச்சினையை மிகவும் மோசமான இனவாத நிலைப்பாட்டில் பார்க்கின்றனர்.

இத்துடன் அரசாங்கத்தின் அடக்குமுறைக் கொள்கை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் போன்ற மட்டுப்படுத்தப்பட்ட விடயங்களுக்காக இன்று மீண்டும் வடக்கிலும் தெற்கிலும் ஒருவித சகோதரத்துவத்தை கட்டியெழுப்புகின்றனர்.அதன் வளர்ச்சி அரசாங்கத்தின் ஆரோக்கியத்திற்கு உகந்த விடயமல்ல. அதை ஆரம்பத்திலேயே உடைக்க வேண்டும்.

நாட்டில் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படலாம் என உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கணிப்புகள் தெரிவிக்கின்றன. எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆனால் அரசிடம் அவைகளுக்குத் தீர்வு இல்லை.

எனவே, நாடு முழுவதும் வெளிப்படும் பொதுமக்களின் கோபத்தையும் வெறுப்பையும் பல்வேறு சக்திகளைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட இனவாதத் தாக்குதல்களாக மாற்ற முடியும். இனவாதத் தாக்குதல்களை நிறுத்த ஜனாதிபதி ரணில் அவசரகாலச் சட்டத்தையும் ஊரடங்குச் சட்டத்தையும் பிறப்பிக்க முடியும்.

இனவாதக் குற்றச்சாட்டின் பேரில் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் கைது செய்யப்பட்டு, கட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, தேர்தல்கள் ஒத்திவைக்கப்படும் வேளையில், தனியார்மயமாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ரணிலுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

ஆகவே, நாட்டில் அடக்குமுறை இல்லை என சமாதானவாதிகளும் தாராளவாதிகளும் கூறலாம். ரணில் செய்வது சட்டத்தை அமுல்படுத்துவதாக கூறலாம். சர்வதேச ஆதரவும் கிடைக்கும்.

பொறாமை கொண்ட இடதுசாரிகள் பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்ப்பதாக வெற்றிபெறும் ”கொடயன” ( ගොඩයන)  கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பொருளாதாரக் கொலைகாரர்கள் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி அல்லது பலவீனப்படுத்தி உடனடியாக பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்யக் கோருகிறார்கள்.

பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிரான நாசகார பயங்கரவாத இனவாதிகள், நாட்டுக்கு உதவும் பொருளாதார சீர்திருத்தவாதிகள் என நாடு இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஆனால் வெற்றிபெறும் (கொடயன) கோட்பாட்டாளர்களைத் திரும்பிப் பார்த்தால் பொருளாதாரக் கொலைகாரர்களின் மடியில் அமர்ந்திருப்பதைக் காணமுடியும்.

இப்படியாக இன்னொரு அதிகாரப் பகிர்வுக் கதையும் குழந்தைகளுக்குச் சாப்பாடு தீர்ந்து போகும்வரை பலிகடாக் கதையாக வரலாற்றில் இடம்பிடிக்கலாம்.

அரசாங்கத்திற்கு எதிரானவர்களைக் கொல்லும் எதிர்க்கட்சியாக மாறும்போது மொட்டுவில் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் அல்லது மஹிந்த ராஜபக்ச முன்வருவார்கள். இதற்கிடையில் முன்னேறக் கூடியவர்கள் முன்னேறுவார்கள்.

அனைத்துத் துறைகளுக்கும் மேலாக பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு 539 பில்லியன் ரூபாவை ஒதுக்கிய ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் மையப் பிரச்சினையான தேசியப் பிரச்சினையை வேடிக்கையாக ஏன் முன்வைத்தார் என சிந்திக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணிலுக்கு உண்மையாகவே அதிகாரத்தை பிரிக்கும் விருப்பம் இருந்தால், அந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழலை உருவாக்குவதற்கு வடக்கிலுள்ள தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இதுவரையில் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளனர்.

“ஜனாதிபதியின் அழைப்பில் நேர்மை இருந்தால், இராணுவ ஆட்சியின் கீழ் உள்ள வடக்கு, கிழக்கில் காணிகள் அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதைக் காட்டுங்கள், தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். பின்னர் “வடக்கு கிழக்கை தமிழர் தாயகமாக அங்கீகரித்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூட்டாட்சி அதிகாரப் பகிர்வுக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம்.

அதிகாரத்தை பிரிக்க தயாரா என எதிர்க்கட்சிகளிடம் கேட்பதை விட, ரணில் மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் முன்மொழிவுகளையும் கோரிக்கைகளையும் ஏற்கிறதா இல்லையா என்பதை முதலில் வெளியிட வேண்டும்.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்காமல், காயம் பட்ட இடத்திற்கு மருந்து போடாமல் வேறு இட்த்தில் மருந்தை தடவுவது, போலியோவால் உருவான மாகாண சபையை சரி செய்வது, அரசியலமைப்பு பாசிச பாணி அரசின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதைத் தவிர வேறில்லை.

ஞானசிறி கொத்திகொட – கட்டுரையாளர்