பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்பு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான செயற்குழு கூட்டம் !

நூருல் ஹுதா உமர்

இறக்காமம் பிரதேச சிறுவர்களின் உரிமை, பாதுகாப்பு, அபிவிருத்தி, சிறுவர் நலன் மற்றும் மேம்பாடு மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள், பெண்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்கள், அவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் என்பவை தொடர்பாக காலாண்டுக்கு ஒரு முறை பிரதேச சிறுவர் அபிவிருத்தி மற்றும் பால்நிலை வன்முறை தடுப்பு குழு கூட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், 2025 ஆம் வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்கான பிரதேச சிறுவர் கண்காணிப்பு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான செயற்குழு கூட்டம் (DCMC & SGBV Task ) இறக்காமம் பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி பி. யசோதா அவர்களின் ஒருங்கிணைப்பில் நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல். முஹம்மட் றஸாக் அவர்களின் தலைமையில் இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச சிறுவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை இடைவிலகல், கல்வி ரீதியான பிரச்சினைகள், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு, பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள், சிறுவர்களை மையப்படுத்திய போதைப் பாவனை, இளவயது திருமணம், சிறுவர்களின் சுகாதார மேம்பாடு, விசேட தேவையுடைய சிறுவர்களின் நலனோம்பல் தொடர்பான விடயங்கள் மற்றும் கிராம மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் 2025 ஆம் ஆண்டில் இரண்டாம் காலாண்டு வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

மேலும், பால்நிலை வன்முறை மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிரதேச மட்டத்திலான அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வேலைத்திட்டங்கள், குடும்ப வன்முறை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள் அவற்றை குறைப்பதற்கும் தடுப்பதற்குமான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

இந்த கூட்டத்திற்கு இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் சார்பாக உறுப்பினர் ஏ.எம். சாகீர் மற்றும் பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி, வலயக் கல்வி பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.எல். நிஸார், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.சபீர், சிறுவர் நன்னடத்தை திணைக்களம், அதிபர்கள், ஜும்ஆ பள்ளிவாசல், ஜம்இய்யதுல் உலமா சபை, பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் பிரதிநிதிகள், மகளிர் சங்க பிரதிநிதிகள், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். முஹம்மட் இம்டாட், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எம். எம்.கே. சாஜிதா, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி எம்.ஐ. பஸீனா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அபிவிருத்தி உத்தியோகத்தர் டி. ஜெயமோகன், கலாச்சார உத்தியோகத்தர் ஏ. எம். ஆரிப், ஏ.எல். நௌபீஸா, அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். றினோஸா, சமுதாயம்சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. நிஸ்வான் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர். ஆகியோர் கலந்து கொண்டனர்.