இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கு தளபாடங்கள் கையளிப்பு

இலங்கையின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (29) இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கமு/கமு/அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடசாலைகளுக்கான தளபாடங்களை வைபவ ரீதியாக கையளித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எம் .ஏ .எம் .தாஹிர் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ் .சஹதுல் நஜீம் பிரதி கல்வி பணிப்பாளர் யூ .எல் .எம். சாஜித் நிந்தவூர் கோட்ட கல்வி பணிப்பாளர் எம் எல் எம் முதாரிஸ் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்திய அரசாங்கம் இலங்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 33 ற்கும் மேற்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியா 2.37 பில்லியன் நிதி உதவி வழங்கி உள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ எம் தாஹிர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இந்த தளபாடங்களை வழங்குவதற்கு இந்திய உயர் சானிகராலயம் முன்வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.