இறக்காமம் மாணிக்கமடு கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டம்

நூருல் ஹுதா உமர்

தமிழ் மக்களின் மிக முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றாக தீபாவளி கொண்டாட்டம் காணப்படுகின்றது. உலகில் தீமைகள் எரிந்து நன்மை எனும் ஒளி வீசி வாழ்வில் சந்தோஷம், மகிழ்ச்சி, இன்பகள் ஒளி வீசும் நாளாக தீபாவளி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், தேசிய சமூக ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை கட்டியெழுப்பும் நோக்குடன் நீதி மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் சிறப்பு தீபாவளி கொண்டாட்டம் இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், இறக்காமம் மாணிக்கமடு தமிழ் கிராமத்தில் நடைபெற்றது.

நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். றினோசாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் திருமதி ஏ.கே. றொஸின்தாஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்த நிகழ்வில், இறக்காமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல். முஹம்மட் றஸாக், கிராம உத்தியோகத்தர் ஏ.சி.எம். சமீர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.சிராஜ், உளவள ஆலோசகர் ஏ.எச்.றகீப், சுற்றுச் சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர். வை.பி. ஜெமீனா உட்பட கிராம மட்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் தீபாவளி சிறப்பு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.