அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருகின்றமை தடுக்க இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவித்தனர்.
நிந்தவூர் பிரதேசத்தில் நிரந்தரமாக கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தற்போது தற்காலிகமாக கடல் அரிப்பை தடுக்க கடற்கரை பகுதியில் மண் மூட்டைகளினால் பாதுகாப்பு சுவர் அமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் மற்றும் அவர்களின் மீன்வாடிகளை வேறு பிரதேசங்களுக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை வழங்கி விட்டு சென்ற போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
குறித்த கடல் அரிப்பினால் மீன்பிடி வாடிகள் பாதிப்புற்று கடல் ஊடறுத்து செல்வதனால் கரையோரத்திலுள்ள 40 க்கும் அதிகமான தென்னை மரங்களும் அழிந்துவிடும் அபாய நிலைமை ஏற்பட்டு வருகின்றமையால் மீன்பிடி தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
எனினும் மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள உயர் அதிகாரிகள் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று குறித்த கடல் அரிப்பு பிரதேசத்தினை பார்வையிட்டு சென்றுள்ளனர்.
நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அலைகளாலும் நீரோட்டங்களாலும் கரையில் உள்ள மண் அல்லது பாறைகள் அரித்துச் செல்லப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இக்கடல் அரிப்பின் காரணமாக கடலோரப் பகுதிகள் அழிந்து மனித வாழ்விடங்களுக்கும் உள்கட்டமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.அத்துடன் கடற்கரையோரம் உள்ள நகரங்கள் பாலங்கள் வீடுகள் மற்றும் பிற கட்டடங்கள் சேதமடைகின்றன.
இதேவேளை நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கான கருங்கல்லிலான அணைக்கட்டு நிர்மாணிப்பதற்கு கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தால் கடந்த காலங்களில் முதல் கட்டமாக பல மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.