மன்னார் நகரில் இனங்களுக்கு இடையே சகவாழ்வை கட்டியெழுப்பும் செயல்திட்டம்.

( வாஸ் கூஞ்ஞ) 16.06.2025

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மன்னார் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையே சகவாழ்வை கட்டியெழுப்பும் செயல் திட்டத்தின் கீழ் 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இதன் இரண்டாம் கட்டமாக இந்து மதத்தலைவரை சந்திக்கும் நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மன்னார் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேஹ் அஸீம் (அத்லி) அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

குறித்த இந்நிகழ்வு இந்துகுருமார் ஒன்றியத் தலைவர் மகா தர்மகுமார குருக்கள் , திருக்கேதீஸ்வர ஆலய பிரதமகுரு கருணானந்த குருக்கள் , திருக்கேதீஸ்வர ஆலய தலைவர் பொறியியலாளர் இராமகிருஸ்ணன் ஆகியோர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மன்னார் நகரக் கிளையின் செயற்குழு உறுப்பினர்களுக்குமிடையில் இச்சிநேக பூர்வ சந்திப்பு இடம் பெற்றிருந்தது.

இதன் போது மன்னார் நகரத்திற்குள் இன நல்லுறவை மேம்படுத்தல் சம்பந்தமான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வெளியிடப்பட்ட நூற்றாண்டு நினைவு மலர் கையளிக்கப்பட்டதென்பது
குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மன்னார் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையே சகவாழ்வை கட்டியெழுப்பும் செயல் திட்டத்தின் முதலாம் கட்ட நிகழ்வு அண்மையில் தோட்டவெளியில் அருட்பணி கிறிஸ்து நேசன் அடிகளார் தலைமையில் கத்தோலிக்க குழுக்களுக்கிடையே நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.