8 தமிழர்களை கொன்றவருக்கு பொதுமன்னிப்பு – ஜனாதிபதியின் முடிவுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்!

யாழ்ப்பாணம் மிருசுவிலில் 08 தமிழர்களை கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றையதினம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.

 

2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 வயது குழந்தை இரு இளைஞர்கள் உட்பட 8 பேர் படுகொலை செய்த மரண தண்டனை கைதியான இராணுவ அதிகாரியை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

“இதுபோன்ற நேரத்தில் கைதிகளின் பிரச்சினையை கையாள்வது என்ற போர்வையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சந்தர்ப்பவாத நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். உண்மையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனை பெற்ற ஒரு வழக்கு இது. மற்றவர்கள் மீது கூட வழக்குத் தொடரப்படவில்லை அல்லது விடுவிக்கப்பட்டனர்.” என கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன், “மரண தண்டனை விதித்திக்கப்பட்ட இவ்வாறான அரிதான வழக்குகளில் இருந்து ஒருவரை விடுதலை செய்வதானது இந்த அரசாங்கம் போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு ஒருபோதும் பொறுப்புக்கூறாது என்பதை உறுதிப்படுத்துகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

2015 யூன் 25 அன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், சார்ஜண்ட் சுனில் ரத்னாயக்கவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய நான்கு சிப்பாய்களும் போதிய ஆதாரமில்லையென்பதால் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.