குடிசை எரிந்ததில் காவலாளியின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, பழுகாமத்தில்  குடிசையொன்று எரிந்ததில், அந்தக் குடிசையில் தங்கியிருந்த வயல் காவலர் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் இன்று (30) அதிகாலை 04 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பழுகாமத்தைச் சேர்ந்த ரி.சண்முகம் என்பவரே உயிரிழந்துள்ளாரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

வயல் காவலில் ஈடுபடும் அவரது குடிசை, வயல்களை அண்டிய ஒதுக்குப்புறத்தில் இருந்ததன் காரணமாக இந்தத் தீச்சம்பவம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் யாருக்கும் தெரியாத நிலையில், குடிசை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இதன்போது, குறித்த குடிசையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த காவலரும் முற்றாக எரிந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பெரும் குற்றத்தடுப்புப் பொலிஸார் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.