செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்;ட மக்களை வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை செயலாளருமான க.கமலநேசன் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது சித்தாண்டி – 01, சித்தாண்டி – 02, சித்தாண்டி – 03, சித்தாண்டி – 04, மாவடிவேம்பு – 01, மாவடிவேம்பு – 02, முறக்கொட்டாஞ்சேனை ஆகிய கிராமங்களுக்கு சென்று வெள்ள பாதிப்புக்களை பார்வையிட்டார்.
குறித்த கிராமத்தில் வெள்ள நீர் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டு காணப்படுகின்றது.
இதன்காரணமாக மக்கள் தோணியின் மூலம் பயணங்களை மேற்கொண்டு உறவினர்கள், வெளி இடங்கள் மற்றும் இடைத்தங்கல் முகாம்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
குறிப்பாக மழை தொடருமாக இருந்தாலும், உறுகாமம் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் பட்சத்தில் சித்தாண்டி கிராமம் முற்றுமுழுதாக மூழ்கும் நிலை காணப்படும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.