முல்லைத்தீவு நீராவியடியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையானது அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டிய விடயமாகும்

முல்லைத்தீவு நீராவியடியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையானது அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டிய விடயமாகும் என கிழக்கிழங்கை இந்துகுருமார் ஒன்றியம் கண்டனம் தெரிவிப்பு.
இந்து குருமார் ஒன்றியம் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இறந்த தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமை, அதனைத்தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை கண்டித்து கிழக்கிழங்கை இந்து குருமார் ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை இன்று(25)மாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலய முன்றலில் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் …
கடந்த 23ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீராவியடியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையானது அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டிய விடயமாகும்.நல்லாட்சி அரசாங்கத்தில் அனைவரும் ஒரே ஒற்றுமையாக வாழவேண்டும். “இது பௌத்த நாடு” என பிக்குமார் கூறுவது ஏற்புடையதல்ல.அதுமட்டுமல்லாமல் நீதித்துறையை பிக்குமார் அவமதித்துள்ளார்கள்.தொடர்ந்து இவ்வாறான செயற்பாடானது இடம்பெற்று வருகின்றது.
எனவே இச்செயற்பாட்டை கிழக்கில் வாழுகின்ற இந்துக்கள் சார்பாகவும்,இந்து மத அமைப்புக்கள் சார்பாகவும்,எமது இந்து மத குருமார் ஒன்றியம் சார்பாகவும் எமது நாட்டின் இந்துமத பொக்கிசங்கள் நிறைந்த இடமாக போற்றப்படுகின்ற முல்லைத்தீவு நீரவீயடிப்பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தன்மையை சீர் கெடுத்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
திருகோணமலை கண்ணியாவிலும் முல்லைதீவிலும் நடைபெற்ற தகாத சம்பவங்கள் எமது இந்து சமயத்தை தொடர்ச்சியாக அவமதித்த வருகின்ற செயற்பாடுகளாகவே இருந்து வருகின்றது.நாட்டின் நல்லாட்சி என்ற பெயரில் எமது மக்கள் , எமது மதம்,எமது கலை , கலாச்சாரம்,பண்பாடு என்பவற்றில் பாரிய கலங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதனை ஒருநாளும் மன்னிக்க முடியாது.எம்மை படைத்த இறைவனும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.இது தெய்வ நிந்தனையும் கூட,எனவே தயவு செய்து எமது இந்துமத அலுவல்கள் அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு தீர்வை பெற்றுத்தர வேண்டுமென்ற கோரிக்கையுடன்,இச்சம்பவத்தை கிழக்குமாகாண இந்து குருமார் ஒன்றியம் சார்பாக வண்மையாக கண்டிக்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.