மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 100நாள் வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் எதிர்காலத்தில் கல்வி மட்டத்தினை உயர்த்தும் நோக்குடன் 100 நாள் கல்விச் செயற்திட்டம் இன்று திங்கட்கிழமை  வலயக்கல்விப் பணிப்பாளரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பட்டதாரிகள் அவுஸ்ரேலியா சங்கத்தின் நிதி உதவியின்கீழ், குறிஞ்சாமுனை பாடசாலை  மண்டபத்தில் நடைபெற்ற இன் நிகழ்வில்  மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் கலந்துகொண்டு  திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

இவ் வலயத்தில் மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் கொக்கட்டிச்சோலையிலும், மண்முனை மேற்கு கோட்டத்தில் குறிஞ்சாமுனையிலும் இரு நிலையங்கள் அமைத்து நிலையத்திற்கு 50 மாணவர்கள் என்ற அடிப்படையில் இவ்வருடம் க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதவுள்ள 100 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு கணிதம், விஞ்ஞானம், தொழிநுட்பம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளதாக இதன்போது வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இச் செயற் திட்டத்தின்மூலம்  கணிதம், விஞ்ஞானம், தொழிநுட்பம் ஆகிய பாடங்களில் எதிர்காலத்தில் சிறந்த பெறுபேற்றினைப் பெறச் செய்வதுடன் அதன்மூலம் பிரதேசத்தின் கல்வி மட்டத்தை உயர்வடையச் செய்யமுடியும் எனவும் இங்கு கல்வித்திணைக்கள அதிகாரிகால் தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.