5 மாதங்களுக்குள் புதியதோர் அரசு

தூய்மையான அரசியல்வாதிகளுக்கு வாக்களியுங்கள்

நாட்டு மக்களுக்கு புதியதோர் அரசாங்கத்​தை உருவாக்கும் வாய்ப்பு எதிர்வரும் ஐந்து மாதங்களுக்குள் கிடைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதன்போது தூய்மையான, மனிதநேயமிக்க, நாட்டை நேசிக்கும், ஊழல், மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட மனிதநேய அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக மக்கள் தமது வாக்குப் பலத்தை உபயோகிப்பார்கள் என்றார்.

வீழ்ச்சியடைந்துவரும் பொருளாதார கட்டமைப்பையும் ஊழல், மோசடிகள்மிக்க தூய்மையற்ற அரசியலைக்கொண்ட

இந்த நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான ஒரேயொரு மார்க்கம் உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கம் ஒன்றினைத் தேர்ந்தெடுப்பதாகும் எனவும், அதற்கான பொறுப்பு நாட்டு மக்களிடமே காணப்படுகின்றதெனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல வசதிகளையும் கொண்ட புதிய மாவட்ட மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (15) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ,

நாட்டை நேசிக்கும் உண்மையான அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினைகளை உரியவாறு இனங்கண்டு அவற்றைத் தீர்த்து வைப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள்.

மேலும் அபிவிருத்தியின் பெரும் பங்காளர்களான சுமார் 16 இலட்சம் அளவிலான அரச சேவையாளர்களும் நாட்டிலுள்ள புத்திஜீவிகளும் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவார்களாயின் நாட்டில் அபிவிருத்தி என்பது ஒரு சவாலான விடயமாக அமையாது.

பெருந்தோட்ட மக்களுக்காக முன்னொருபோதும் நிறைவேற்றப்படாத வேலைத்திட்டங்கள் கடந்த ஐந்து வருடங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன மக்களுக்கான இலவச மருத்துவம், கல்வி மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல விரிவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டைச் சீரழிப்பதற்கான இலகுவான மார்க்கம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலாகும் என்பதை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக நாட்டிற்கு நன்மை பயக்கும் விடயங்களுக்காகப் பாரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவற்றின் முழுமையாக பலன்களைப் பெற்றுக்கொள்வது மிக சிரமமாகும்.

நாட்டிற்கு நன்மைபயக்கும் விடயங்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் உண்மையான மனித நேயத்துடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

நெதர்லாந்து அரசின் இலகு கடனுதவி திட்டத்தின் கீழ் 07 பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, 600 கட்டில்களைக் கொண்ட நோயாளர் விடுதி, நவீன தொழில்நுட்பத்துடனான சத்திர சிகிச்சைக்கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, மருத்துவக்கூடம், குருதிமாற்று சிகிச்சை நிலையம் மற்றும் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்குமான உத்தியோகபூர்வ இல்லங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 2012ஆம் ஆண்டில் ஜனாதிபதி சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது இந்த மருத்துவமனையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பிரயாணிகளுக்கு உயர் தரத்திலான, பாதுகாப்பான, வினைத்திறனான மருத்துவ சேவைகளை வழங்கவும் இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, நவீன் திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஆளுநர் மைத்ரி குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர், நெதர்லாந்து அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள் மற்றும் நுவரெலியா பொது மருத்துவமனையின் பணிப்பாளர் மகேந்திர செனவிரத்ன உள்ளிட்ட பணிக்குழாமினரும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.