இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம்.

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிந்தார்.

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டவுறிஸ், பிரித்தானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் டேவிட் அஸ்;மன், அரசியல் பிரிவுக்கான அதிகாரி ஜோவிதா அருளானந்தம் ஆகியோர் இந்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தபோது அவர்கள் மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான வே.தவராஜா, சிவம் பாக்கியநாதன், த.இராஜேந்திரன், எஸ்.ஜெயந்திரகுமார் மற்றும் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் கணக்காளர் ஆகியோர் வரவேற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

கடந்த ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றதன் பின்னர் பிரித்தானிய தூதுவர் முதல் முறையாக மட்டக்களப்புக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது கடந்த ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான மட்டக்களப்பின் நிலைமைகள் குறித்து பிரித்தானிய தூதுவர் கேட்டறிந்ததுடன், குறித்த தாக்குதலின் பின்னர் இனங்களிடையே காணப்படும் முரண்பாடுகள் தொடர்பிலும் அவற்றினை நீக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தூதுவர் கேட்டறிந்துகொண்டார்.

அத்துடன் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னெடுப்புகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்துகொண்ட தூதுவர் பிரித்தானியாவில் இருந்து மட்டக்களப்புக்கு முதலீட்டாளர்களை இணைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தூதுவரின் கவனத்திற்கு மாநகரசபை உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்டதுடன் இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான சூழலை சர்வதேசத்தினால் மட்டுமே ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனவும் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வரால் இங்கு தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.