கல்முனை பிரதேச செயலகம் அமைச்சர் ஹக்கீம் இப்படிச்சொல்லுகின்றார்.

கல்முனை உப பிரதேச செயலகத்தை நிலத்தொடர்பற்ற ரீதியில் பிரதேச செயலகமாக தரமுயர்த்தாமல், இரு சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் நிலத்தொடர்பு அடிப்படையில் மாத்திரமே தரமுயர்த்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு இலங்கை அரபுக் கல்லூரியின் 9ஆவது பட்டமளிப்பு விழா இன்று (09) அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
செய்தியாளர்கள் மத்தியில் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;
நீண்டகாலமாக சர்சைக்குரிய விடயமாக இருந்துவரும் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசியிருக்கின்றோம். இவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகண்ட பின்னரே இது சாத்தியமாகும்.
இரு பிரதேச செயலக பிரிவுக்குள் இருக்கின்ற சமூகத்தினர் இரு வேறாக தனித்தனியே பிரிந்துசெல்வது திருப்திகரமான விடயமாகத் தெரியவில்லை. தனியே ஒரு சமூகம் மாத்திரம் பிரதேச செயலகம் ஒன்றுக்குள் இன ரீதியாக உள்வாங்கப்பட வேண்டும் என்பது சாத்தியமான விடயமல்ல.
அதேபோன்று பிரதேச செயலக எல்லைகள் ஒரு சமூகத்துக்கு மாத்திரம் சார்பாக பிரித்துக் கொடுக்கப்பட முடியாது. அப்படியதொரு சட்டம் சம்பந்தப்பட்ட அமைச்சிலும் இல்லை. கிராம சேவகர் பிரிவுகளின் எல்லை நிர்ணயத்தில் இருக்கின்ற சர்ச்சைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தனது பிரதேசம் சார்ந்த விவகாரங்களில் கரிசணை காட்டவேண்டியது அவரது தார்மீகப் பொறுப்பு. அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட அமைச்சின் இராஜாங்க அமைச்சராக இருந்துகொண்டு அவர், கட்சித் தலைமையுடன் இணைந்து இந்த விடயத்தை கையாண்டு வருகிறார்.
அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் கோடீஸ்வரன் தனது மாற்றுக் கருத்துகளை பேசிவருகின்றார். தான்சார்ந்த சமூகத்தின் நிலைப்பாடுகளை எடுத்துரைக்கின்ற அதேவேளை, இந்த விடயத்தில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதாக இருந்தால் இரு சமூகத்தையும் திருப்திப்படுத்தும் வகையில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பில் மாவட்ட செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுடன் பேசுவதுடன், இரு கட்சிகள் மத்தியிலும் கலந்துரையாடப்பட வேண்டும். இப்பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டால்தான் மாத்திரம்தான் இந்த விடயம் சாத்தியமாகும் என்றார்.
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்