மறைந்தும் வாழும் மாமனிதர் ஜோசப்பராஜசிங்கம்

மறைந்தும் வாழும் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

ஜோசப் பரரராஜசிங்கம்;

      தமிழினத்தின் அடையாளம்!

      ஐம்பது ஆண்டுகளையும் விஞ்சி தமிழர் அரசியல் வானில் பிரகாசித்த துருவ நட்சத்திரம்!

      தந்தை செல்வாவின் அடியொற்றி அரசியல் செய்த மக்கள் தலைவன்!

      ஈழத்தமிழினத்தின் மனிதவுரிமைக் காவலன் என்று சர்வதேசத்தால் அடையாளம் கண்ட மனிதவுரிமைக் காப்பாளன்!

      எந்த மண்ணின் விடுதலை வேண்டிப் போராடினாரோ அந்த மண்ணையே தன்னுதிரத்தால் சிவப்பாக்கித் தன் இன்னுயிரை ஈகம் செய்த தியாகி!

ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலனாக சர்வதேச அரங்கில் மிகவும் துணிவுடன் ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்து பத்து ஆண்டுகளாகின்றன.

பதின்மூன்று ஆண்டுகள் என்ன பதிமூவாயிரம் ஆண்டுகள்தான் உருண்டோடினாலும் தமிழுக்காக தமிழர்க்காக வாழ்ந்தவர்கள் மரணத்தை வென்றவர்களே! நித்திலம் நிலவும்வரை அவர்கள் வாழ்வு நிஜம்.

அப்படியான ஒருவர்தான் காலத்தை வென்று வாழும் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள்.

மார்கழித் திங்கள் 25 ஆம் நாள் உலகப்பெருநாள். அந்த உன்னதத் திருநாளன்றுதான் இந்த உத்தமன் தன்னினத்திற்காக உயிர் நீத்து தியாகியாகினார். புனிதனை நினைந்து உருகிய வேளையில் புனிதம் நிறைந்த இடத்தில் தன் இன்னுயிரை ஈகம் செய்து ஜோசப் பரராஜசிங்கம் மாமனிதரானார்.

தன்வாழ்வு துறந்து பிறர்க்கென வாழும் பெருந்தகைகளால் வாழும் இவ்வுலகென்பார்கள். எத்தனை அழிவுகளைச் சந்தித்தபோதும் இந்த மண் வாழ்கிறதென்றால் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் போன்ற மாமனிதர்களது தியாகத்தாலேதான் என்றால் மிகையாகாது.

     தமக்கென முயலா தோன்தான்

     பிறர்க்கென முயலுநர் உண்மையானே!

 

மேற்படி கூற்றுக்கு இப் புறநாநூற்றுப் பாடல் சான்று பகிர்கின்றது.

அவரோர் அரச ஊழியர். சினிமாத்துறை வாணிபத்தில் சிறப்புற்று விளங்கியவர். இவ்வளவோடு நின்றிருந்தால் கோடீஸ்வரராக வாழ்ந்திருப்பார்.

கொள்கை கோட்பாடுகள் நிறைந்த இலட்சியம் கொண்டது தமிழ்த் தேசிய அரசியல். இது மலர்ப்படுக்கை அரசியல் அல்ல. மாறாக இதுவோர் முட்படுக்கை. முட்படுக்கை அரசியலை முழுமனதோடு ஏற்றுக்கொண்டே நெருப்பாற்றைக் கடக்க முன்வந்தவர்.

1934 ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 26 ஆம் நாள்  இந்த மண்ணில் தோற்றம் பெற்றவர் 1952களில் தன்னுடைய 18 ஆவது அகவையில்  தந்தை செல்வாவின் அரசியல் பாசறையில் இணைந்துகொண்டார்.

தனிச் சிங்களமொழிச் சட்டத்தை எதிர்த்து  1956 ஆம் ஆண்டு தந்தையவர்கள் தமிழ்த் தேசம் தழுவிய மிகப்பெரிய அறவழிப்போரை ஆரம்பித்தார். அன்றையநாள் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் திருமண தினமாகவிருந்தபோதும் அந்த அறப்போரில் இருவரும் களமாடி மகிழ்ந்தனரென்றால் அவர்கள் கொண்டிருந்த இனப்பற்றை என்னவென்று சொல்வது.

அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் பாரிய சவால்களை இவ்வரசியல் வாழ்வில் எதிர்கொண்டார்.

1972 ஆம் ஆண்டு இலங்கையைக் குடியரசாக்கியது ஈழத்தமிழினத்தை அரசியல் அனாதையாக்கியது. அறப்போர் தீவிரமடைந்தது. அறப்போரின் வெக்கை தாங்கமுடியாது அப்போதிருந்த சிறிமாவோ அவர்களின் அரசாங்கத்தின் மட்டக்களப்பு அரசியல் அதிகாரி ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை நுவரெலியா மாவட்டத்திற்குத் தூக்கியெறிந்தார். ஆனால் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களோ அரசாங்கப் பதவியை உதறித்தள்ளி முழுநேர அரசியலுக்குள் காலூன்றினார்.

இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டார் என்ற காரணத்திற்காக ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை விடுதலைப் புலிகள் அழைத்துச் சென்றனர்.

தங்களது தவறுக்காக வருந்தி அவரை விடுவித்தனர். அப்போது சொந்தங்களெல்லாம்“வேண்டாம் இந்த விபரீத அரசியல் அதிலிருந்து ஒதுங்குங்கள்” என்று அவரை வற்புறுத்தினார்கள். ஆனால் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.

2004 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களையெல்லாம் விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த மட்டக்களப்பு அணியினர் தங்கள் பகுதிக்கு அழைத்தனர்.

“வடகிழக்கென்ற தமிழ்த்தேசிய அரசியல் இனி எமக்கு வேண்டாம். மட்டக்களப்பென்ற அளவோடு இனி அரசியல் அமைய வேண்டும்” என்று கட்டளை பிறப்பித்தார்கள்.

“இயக்கங்கள் உருவாகும் முன்பே தந்தை செல்வாவின் தலைமையையேற்று அரசியலுக்குள் வந்தவன். வடகிழக்கு என்ற தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து இம்மியளவும் என்னால் விலக முடியாது” என்று ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் பதிலுரைத்தார். அன்றிலிருந்து பாரிய கொலை அச்சுறுத்தல்களுக்கு ஆளானார். இதற்கெல்லாம் சற்றும் மசியாதவராகத் தேர்தலில் போட்டியிட்டார்.

தங்கத்தை உரசித் தரம் பார்ப்பதுபோல் அவரது இலட்சிய வேட்கைக்கு ஏற்பட்ட சோதனைகள் இவையாகும்.

இவை எதற்குமே அஞ்சாத நெஞ்சினனாக அரசியல் புனிதம் காத்தார். தானேற்ற இலட்சியத்திற்கும் தலைமைக்கும் விசுவாசமாக வாழ்ந்ததனால் தந்தை செல்வாவால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமை அணியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட தலைவரானார். தான் மட்டுமல்லாது தனது மனைவி சகிதம் அறப்போர் அரசியல் கண்ட பெருமைக்குரியவர்.

சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளோடு நெருக்கமான உறவுகளைப்பேணி அவ்வப்போது நடைபெற்ற மனிதவுரிமை மீறல்களையெல்லாம் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர். பல படுகொலை அத்தியாயங்களைக்கண்டது தமிழர் விடுதலைப் போராட்ட வரலாறு. அத்தனை  படுகொலைகளையும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளில் பதிவு செய்தவர் அவர். தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தைத் தோலுரித்துக் காட்டினார்.

கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் நடந்தபோது அவர் ஓயாது சற்றும் தளராது மேற்கொண்ட அழுத்தத்தினால் அப்போதிருந்த பிரேமதாச அரசாங்கம் அந்தப் படுகொலைகளை விசாரிக்க விசாரணைக்குழுவை அமைத்தது.

தமிழினம் சந்தித்த அனர்த்தங்களிலிருந்து மக்களுக்குச் சற்று ஆறுதலளிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை வரவழைத்தார். அவ்வமைப்பின் முதலாவது கூட்டம் அவரது இல்லத்திலேயே நடைபெற்றது.

மத்தியமுகாம் பகுதியிலே கோணேஸ்வரி என்ற தமிழ்ப் பெண்  பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அவரது பெண்ணுறுப்பிலே குண்டுவைத்துத் தகர்க்கப்பட்ட கொடூரமறிந்து சீற்றம்கொண்டவர் உலகரங்கிலே மட்டுமல்லாது இங்கும் மிகவும் காரசாரமாகக் கண்டித்துக் குரலெழுப்பிக் கொண்டிருந்தார். அதன் நிமித்தம் அந்த விசாரணை நடைபெற்ற கல்முனை நீதிமன்றச் சாட்சிக் கூண்டில் மண்ணுக்கு விடைகொடுக்கும்வரை ஏறி இறங்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.

ஐ.நா.ச.இன் மனிதவுரிமை ஆணைக்குழு ஈழத்தில் போர்க்குற்ற விசாரணைவேண்டி நிற்கும் இந்தக்காலகட்டத்தில் ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலன் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் இல்லாதிருப்பது தமிழர்களுக்கெல்லாம் பெரும் கவலையாகும்.

பாராளுமன்றப் பிரவேசம்

1989 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தபோதும் இடையிலே ஏற்பட்ட ஒரு வெற்றிடத்தினால் அவர் பாராளுமன்றப் பிரதிநிதியானார்.

 

அவர் ஆற்றிய அளப்பரிய சேவையினால் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் 48000 வாக்குகளுக்குமேல் பெற்று மட்டக்களப்பின் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியாக அவரை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

மூன்று மொழிகளிலும் விற்பன்னர். மொழி ஆளுமை மிக்கவர். பாராளுமன்றத்தில் அவரது கட்சியின் பிரதம கொறடாவாகப் பணியாற்றினார். அவரது பேச்சுக்கள் அனைத்தும் மக்களது வரவேற்பைப்பெற்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றல்லாமல் அமைச்சர்கள் பிரதமர் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரதும் நல்லெண்ணத்தைப் பெற்றவர். அவரது இறுதி நிகழ்வில் பங்குகொண்ட அனைவரும் அவரை அவ்வாறே புகழ்ந்துரைத்தார்கள்.

இயல்பாகவே தன்னிடமிருந்த எழுத்து வல்லமையோடு பத்திரிகைத் துறையினுள்ளும் தன்னைச் சேர்த்துக்கொண்டு இதழியல் சேவையைத் தொடர்ந்தார். “சுகுணம் ஜோசப்”என்ற பெயரில் அப்போது பிரபல்யமாக விளங்கிய தினபதி சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் பத்திகள் புனையத் தொடங்கினார். ஆய்வுகள் நிறைந்த பத்திகள்  வாசகர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

எழுதுவதோடு விட்டுவிடாமல் கிழக்கிலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் கண்டு அதன் தலைவராகப் பணிபுரிந்து இதழியல் சேவையின் உயர்வு கண்டவர் 71 ஆண்டுகள் இம்மண்ணிலே தமிழர்க்காக வாழ்ந்து தமிழ் மண்ணிலே வித்தாகிய அமரர் ஜோசப் பரராஜசிங்கம் பல்லாளுமை கொண்ட மக்கள் தலைவன். இப்பேற்பட்ட விசுவாசம்மிக்க தலைமையைப் பறிகொடுத்த தேனாடு அப்படியொரு தலைவன் வருகைக்காகக் காத்திருக்கிறது!.

25.12.2018                                வே.தவராஜா

                                       35 ஜெயந்தி வீதி

                                       மட்டக்களப்பு