ஹோமாகம, பிடிபனவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவனை கொடூரமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் இன்று (7) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் ராஜிந்திர ஜெயசூரிய மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.
குறித்த ஒவ்வொருவரும் தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதவான் அனுமதி வழங்கினார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், ஹோமாகம தலைமையகப் பொலிஸார் விசாரணை நடத்தி, குறித்த சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கிரிந்திவெல, தெல்கொட, யுதகனாவ, தலபிட்டியாகம, நலங்குட்டி மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், ஹோமாகமவின் பிடிபன பகுதியில் உள்ள புதிய விடுதியில் வைத்து சந்தேகநபர்களான குறித்த மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்ததற்காகவும், மாலை 6 மணிக்குப் பிறகு பல்கலைக்கழகத்தில் சுற்றித் திரிந்ததற்காகவும், மாற்றுப் பெயரைப் பயன்படுத்தாமல் இருந்ததற்காகவும் சம்பந்தப்பட்ட மாணவர் தாக்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.