வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு திருக்கோவில் காரைதீவு பிரதேச சபைகளில் அதிகமான இடங்களை நாம் கைப்பற்றுவோம் என ஜக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் அமைந்துள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் காரியாலயத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த இரு தேர்தல்களிலும் மக்கள் சோரம்போய் வாக்களித்ததன் காரணமாக ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த நாட்டிற்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்க கூடியவர் சஜித் பிரேமதாசா ஒருவரே என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தியினருக்கு கையிலே ஒரு மைக் கிடைத்தால் போதும். அந்த மைக்கை வைத்துக்கொண்டு முடியுமானவரை பொய் சொல்லுகின்றனர். இப்படியான எல் வோட் காரர்களுக்கு நீங்கள் வாக்கினை வழங்கவேண்டாம் என கூறியிருந்தோம். அதனையும் மீறி வாக்களித்தனர். இந்த வாகனம் தற்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆகவே கடந்த தேர்தல்களை போலன்றி கண்ணியமான வேட்பாளர்களை களமிறக்கியுள்ள சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து பிரதேச சபையில் இருந்து மாற்றத்தை கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.