திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச் –

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வானது இன்று (04) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சன அவர்களினால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த முப்படை வீரர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

“தேசிய மறுமலர்ச்சிக்கு தயாராகுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்ட செயலக வளாகத்தில் மர நடுகை நிகழ்வும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வ மத தலைவர்களின் பங்கேற்புடன் இடம் பெற்ற, இந்த நிகழ்வில், இலங்கையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்லின கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. கலை கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.