37 வருடகால அரச சேவையில் இருந்து அதிபர் லாஹிர் இன்று ஓய்வு.

இறக்காமம் அமீரலிபுர வித்தியாலய
அதிபர் எம்.எஸ்.லாஹிர் தனது 37 வருடகால அரச சேவையில் இருந்து இன்று (2) முதல் ஓய்வு பெற்றுள்ளார்.

இஸ்மாலெவ்வை முகம்மது செய்னுதீன் மற்றும் உதுமான் கண்டு அவ்வா உம்மாவிற்கு முதலாவது புதல்வராக எம்.எஸ்.லாஹிர் அட்டாளைச்சேனையில் 1965.02.03 ஆம் திகதியன்று பிறந்தார்.

தனது ஆரம்பக் கல்வியை அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர்தர கல்வியை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையிலும் பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் கற்று சிறப்புக் கலைப் பட்டதாரியாக வெளியேறினார்.

ஆசிரியர் சேவையில் 1988.08.29இல் இணைந்து 2012.10.02 வரை ஆசிரியராக, ஆசிரியர் ஆலோசகராகக் கடமையாற்றி 2012.10.03 முதல் இலங்கை அதிபர் சேவையில் இணைந்து 2020 வரை அதி கஷ்டப் பிரதேசப் பாடசாலையான வாங்காமம் ஒராபி பாஷா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றினார்.

இக் காலப்பகுதியில் மாணவர்களது பாட, இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் மாகாண தேசிய மட்டத்திற்கு சாதனைகள் படைத்து, பின் இறக்காமம் அமீரலிபுர வித்தியாலயத்தில் 2020.01.02 முதல் 2025.02.02 வரை மொத்தமாக 37 வருடங்கள் அரச சேவையில் கடமையாற்றி இன்று முதல் ஓய்வு பெற்றுச் செல்கின்றார்.

அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியில் விசேட கல்விக்கான வரை வருகை தரு விரிவுரையாளராக 2007 முதல் 2018 காலப்பகுதியிலும் மற்றும் 2009 முதல் தேசிய கல்வி நிறுவகத்தின் உட்படுத்தல் கல்விப் பிரிவில் ஒரு வளவாளராகவும் கடமையாற்றினார்;.

1988.08.29 முதல் 1992.03.24 ஆம் திகதி வரை அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் முதல் ஆசிரியர் நியமனம் (ஆரம்பக் கல்வி) பெற்று கடமையாற்றி அதன் பின் அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரியில் 1994.03.28 வரையும் கடமையாற்றினார்.

பின்னர் இறக்காமத்தைச் சேர்ந்த எஸ்.எல்.மஹ்பூபா ஆசிரியையை 1993.10.03 கரம்பிடித்து 1994.03.29 முதல் 2004.12.31ஆம் திகதி வரை இறக்காமம் அல்-அஷ்ரப் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) பிரதி அதிபராகவும் பின்னர் 2005.01.01 முதல் 2005.06.06 வரை வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரம் தாஹிறா வித்தியாலயம், 2005.06.07 முதல் 2005.11.30 வரை வரிப்பத்தான்சேனை அல்-அமீன் மகா வித்தியாலயத்திலும் கடமையாற்றி விசேட கல்விக்கான ஆசிரிய ஆலோசகராக 2005.12.01 முதல் 2012.10.02 வரை சம்மாந்துறை வலயத்தில் மகத்தான சேவையாற்றியுள்ளார்.
நிதாஸ், சமாயில் ஆகிய இரு புதல்வர்களின் தந்தையுமாவார்.