வெள்ள அனர்த்தம்- இடம்பெயர்ந்த மக்களை சந்தித்த சம்மாந்துறை பிரதேச செயலாளர் குழுவினர்

பாறுக் ஷிஹான்

தொடர் அடை மழை காரணமாக  இடம்பெயர்ந்த மக்கள்  தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  மல்கம்பிட்டி கிராம சேவகர் பிரிவில் உள்ள  19 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் தற்காலிகமாக   திங்கட்கிழமை (20)  சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலய இடை தங்கல் முகாமில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை பார்வையிட சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம் , வீரமுனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கெப்டன் தனுக, தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் அஸாறுடீன் சலீம், கிராம சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் தொடர் அடை மழை காரணமாக   சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் வெள்ளம் வடிந்தோடுவதற்காக வான் கதவுகள் திறந்து விடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.