மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்_சண்முகம்

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (03) இடம் பெற்றது.
காலை 09:00 மணிமுதல் பிற்பகல் 12:30 மணி வரை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்குகொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் மக்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களைப் பற்றி அவையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

துறைமுக அதிகார சபையினரால் கையகப் படுத்தியுள்ள 5226 ஏக்கர் நிலப் பகுதியில் 1887 ஏக்கர் நிலப் பகுதில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர் ஆகவே இந்தப் பகுதியை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டுமென காந்திரமாக கூறினார். இதே போன்று வெல்வெறி பகுதியில் அரசாங்கத்தினால் கையகப் படுத்தப் பட்ட நிலத்தையும் உடனடியாக விடுவித்து உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

திருக்கோணமலை நகரத்தில் அமைந்துள்ள மக்ஹய்சர் விளையாட்டு அரங்கம் பாரம்பரியமாக திருக்கோணமலையில் பல சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கித் தந்தது எனவும் இந்த விளையாட்டு அரங்கைச் மீண்டும் சரி செய்து உருவாக்குவதன் மூலம் பல இளம் விளையாட்டு வீரர்களது ஏக்கத்தை தீர்ப்பதோடு அல்லாமல் சர்வதேச போட்டிகளை நடத்தி நாட்டிற்கு வருமானத்தையும் வெளிநாட்டு நாணய மாற்று வருவாயையும் பெருக்க இயலும் எனவும் கேட்டுக் கொண்டார்.

திருக்கோணமலை தள மருத்துவமனையில் போதிய வசதியின்மையினால் மகப்பேறு காலத்தில் பெண்கள் பல சிரமத்திற்கு உள்ளாகின்றனர் ஆகவே சிறப்பான நடுவம் ஒன்று அமைக்க வேண்டுமென்றும், மருத்துவமனைக்கு செல்லும் வீதியினை செப்பனிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், திருக்கோணமலை நகர சபைக்குற்பட்ட பகுதியில் 03 மதகுகளும், திருக்கோணமலை உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் 12 வீதிகளும், 07 மதகுகளும் மறு சீரமைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.