திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலையின் 19வது ஆண்டு நினைவேந்தல்..!

திருகோணமலை கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்னால் நேற்று வியாழக்கிழமை (02) மாலை இடம்பெற்றது.

திருகோணமலை டொக்யார்ட் வீதி, பெரிய கடற்கரைச் சந்தியிலுள்ள காந்தி சிலைக்கு அருகாமையாக மாலைப் பொழுதில் தினமும் இளைஞர்கள் நின்று கதைப்பது வழக்கம். 02.01.2006 அன்றைய மாலைப் பொழுதும் மாணவர்கள் பலர் அவ்விடத்தில் கூடிநின்று கதைத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்றில் வந்த இனம் தெரியாத நபர்கள் அந்த இளைஞர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டுக் கோட்டைப் பக்கமாகச் சென்றனர். கைக்குண்டு வெடித்ததில் திருகோணமலை புனிதஜோசப் கல்லூரி மாணவரான யோகராஜா பூங்குழலோன் என்பவர் காயமடைந்தார்.

இவரை ஏனைய மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் அங்கு சுமார் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் கடற்கரையில் நின்ற மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடத்தொடங்கினர். இதற்கிடையில் காயமடைந்த மாணவர்களுக்கு அருகில் விரைந்த கடற்படையினர் அவர்களை நிலத்தில் விழுத்தி கண்மூடித்தனமாகத் தாக்கினர். மாணவர்கள் இச்சம்பவம் பற்றி தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறியபோதும் மாணவர்களைச் சப்பாத்துக் கால்களால் மிதித்து முழங்காலில் நிக்க வைத்து சுட்டுக் கொன்றதாக அக்காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 05 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் விபரம்
01. லோகிதராசா ரொகான்
02. சண்முகராஜா சஜீந்திரன்
03. மனோகரன் வசீகர்,
04. தங்கத்துரை சிவானந்தன்
05. யோகராஜா கேமச்சந்திரன்