ஓட்டமாவடியில் உயிரிழந்த யானை!

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வயல் பிரதேசத்தில் யானை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் நேற்று (29) மாலை உயிர் இழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று (29) (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அடம்படிவட்டுவான் பகுதியில் விவசாயி ஒருவரது வயல் பிரதேசத்தில் குறித்த யானை எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளதுடன் அப்பகுதி விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

கிரான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த யானையை பார்வையிட்டு அதற்கான முதலுதவிகளை வழங்கியதுடன் இந்த யானையின் நிலவரம் தொடர்பாக அம்பாறை வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர்களுக்கு அறிவிக்கப்படடிருந்த நிலையில் யானை உயிர் இழந்துள்ளது.

குறித்த யானை பத்து தொடக்கம் பதினைந்து வயதுக்குள் இருக்கலாம் என்று கிரான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கணிக்கப்பட்டுள்ளது. வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் கல்குடா அனர்த்த அவசர உதவிச்சேவை மற்றும் அகீல் அவசர உதவி பிரிவு என்பவற்றின் உறுப்பினர்கள் உதவிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.