சீன அரசாங்கத்தினால் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் சீன தூதுவர் H.E.Qi Zhenhong அவர்களினால் இன்று (29) திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் 700 பேருக்கு தலா 6500 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்ட செயலகத்தில் வைத்து 200 பேருக்கு இன்று குறித்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பயன்பெற்ற பயனாளிகள் இலங்கை அரசாங்கத்திற்கும் சீன நாட்டுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் வெ.இராஜசேகர், அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் கு. சுகுணதாஸ், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், சீனத்தூதுவர் H.E.Qi Zhenhong அவர்களின் குழுவினர் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.