மட்டக்களப்பு மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டம் இன்று (11) திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய ஜஸ்டினா முரளிதரன் அவர்களது தலைமையில் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி. நவரூபரஞ்ஜனி முகுந்தன் (காணி) அவர்களது ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது ஆறு பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அரச காணிகளை அரச திணைக்களகங்களுக்கு கையளித்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
பிரதேச செயலக ரீதியாக முன்வைக்கப்பட்டிருந்த 20 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், பிரதேச செயலக ரீதியில் காணப்படுகின்ற அரச திணைக்களங்களுக்கான காணி ஆவணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் பரிசீலணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில் இன்று மாவட்ட பயன்பாட்டு குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி செயலாளர்கள், காணிப்பயன்பாட்டு திட்டமிடல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.அருள்ராஜ் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர், காணி உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களகங்களின் அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.