அம்பாறை மாவட்டத்தில் மூடப்பட்ட “சதோச” கிளைகளை மீண்டும் திறக்குமாறு கோரிய கடிதமொன்றை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வர்த்தக, உணவு கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,
மக்களின் நலனை கருத்திற் கொண்ட முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியினால் அம்பாறை மாவட்டத்தில் நற்பிட்டிமுனை, மாளிகைகாடு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களில் திறந்து வைக்கப்பட்ட “சதோச” கிளைகள் கடந்த அரசாங்கத்தினால் மூடப்பட்டுள்ளது. அதனால் அரச மாணிய விலையில் வழங்கப்படுகின்ற பொருட்களை பெறமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் அப்பிரதேச மக்கள் காணப்படுகின்றனர்.
அரசாங்கம் மானிய அடிப்படையில் வழங்கும் அத்தியாவசிய பொருட்களை
அப்பிரதேச மக்களும் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென அஷ்ரப் தாஹிர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கார்ப்புணர்ச்சி கொண்ட கடந்தகால அரசாங்கம் மக்கள் நலனைப் பாராது மூடிய சதோச கிளைகளை, மீண்டும் திறந்து வைத்து அதனை மக்கள் பாவனைக்காக அவசரமாக தந்துதவுமாறு கோரி அமைச்சருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.