கடந்த தேர்தலில் கருணா செய்தது தவறு. அவர் தெரியாமல் அதை செய்தார்.ஆனால் இம் முறை தமிழருக்கான ஒரேஒரு பிரதிநிதித்துவம் ஊசலாடுகிறது என்று தெரிந்தும் இங்கு வரிந்து கட்டிக் கொண்டு சங்கு போட்டியிடுவது மகாதவறு. எனவே அம்பாறைத்தமிழர்களுக்கு கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்கின்ற துரோகம் மகா துரோகம் ஆகும்.
இவ்வாறு காரைதீவில் தனது பிரச்சார அலுவலகத்தை நேற்று (9) சனிக்கிழமை மாலை திறந்து வைத்து பேசிய அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளருமான ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்தார் .
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 60 ஆயிரம் வாக்குகளை பெற்று சரித்திரம் படைக்கும் என்றும் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..
அன்று கருணா மட்டும் வந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை சிதறடித்தார். இன்று படகு வீடு சைக்கிள் திசைகாட்டி மணிக்கூடு என வந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை அழிக்க புறப்பட்டு இருக்கின்றனர் .
இவர்களெல்லாம் கடந்த காலத்தில் இங்குள்ள தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள்? என்பதை மக்கள் அறிவார்கள்.
தாங்கள் வெல்ல முடியாது என்று அறிந்தும் தெரிந்தும் களம் இறங்கி இருக்கின்றார்கள்.
புளட் சித்தார்த்தன் இயக்கத்தில் இயங்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சங்கு படு தோல்வி அடைய இருக்கின்றது. தெரிந்தும் சுரேஷ் சித்தரின் தேசிய பட்டியலுக்காக இங்கு அவர்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றார்கள் .
75 வருட கால பழந்தமிழ் கட்சியான எமது கட்சியை உடைப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எதுவுமே எடுபடாது .
நாங்கள் அம்பாரை மாவட்டத்தில் 2015 தொடக்கம் 2020 வரைக்கும் 1800 மில்லியன் பெறுமதி யான அபிவிருத்தியை செய்து இருக்கின்றோம்.
இம்முறை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இலங்கை தமிழரசுக் கட்சி 60 ஆயிரம் வாக்குகளை பெற்று சரித்திரம் படைக்க இருக்கிறது.
எனவே தமிழரசுக் கட்சி வெல்லப்போவது தெரிந்த விஷயம்.அதுக்கு மட்டும் ஆதரவு அளித்து உங்களது வாழ்வை வளப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார் .
வேட்பாளர் கே.யசோதரனும் கலந்து சிறப்பித்தார்.