கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுவன் மரணம்; தீபாவளி தினத்தில் சோகம்!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

தீபாவளி தினமான நேற்று (31) மாலை பாவனையற்ற கிணற்றில் மூன்று வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை, பலாச்சோலையை எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாவனையற்ற கிணற்றை துருப்பிடித்த தகரத்தினால் மூடியும்  பலமற்ற ஏணியொன்றும் அதில் சாத்தியும் வைக்கப்பட்டிருந்ததால் சிறுவன்அதில் ஏறி தவறி விழுந்தே நீரில் மூழ்கி மரணித்திருக்கிலாம் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு ஏறாவூர் பொலிஸாருடன் வருகை தந்த  திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதத்தை அனுப்பிவைத்தார்.

சிறுவனின் உடல் இன்று (1) உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.