தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும்

கைத்தொழில் அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட விதாதா வள நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்த தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் இரு தினங்களை கொண்ட விற்பனை மற்றும் கண்காட்சி நிகழ்வானது இன்று (09) கல்லடி பாலத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு, கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களின் கீழ் இயங்கும் விதாதா வள நிலையங்களின் கண்காணிப்பில் உள்ள தொழில் முயற்சியாளர்களது கைவண்ணத்தில் உருவான நூற்றுக்கும் அதிகமான உள்ளூர் உற்பத்திப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், விற்பனையும் செய்யப்பட்டன.

தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுடன், நுகர்வோர்களிடமிருந்து வருகின்ற கேள்விகள் மற்றும் விற்பனை வாய்ப்புகளை சலுகை விலையில் மக்கள் கொள்வனவு செய்வதற்கு இக் கண்காட்சி மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கள இணைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு