கடன்களையும் பெற்று நாட்டு வளங்களை அடாத்தாக விற்கும் ஒரு தலைவன் தான் ரணில்!

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கின்ற இந்த நேரத்தில் யாருக்கு வாக்களிப்பது என்கின்ற தீர்மானத்தை மக்கள் எடுக்கப் போகின்ற இந்த நேரத்திலே ஒரு மும்முனைப் போட்டி இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க அவர்களை பொறுத்தவரை இந்த நாட்டை மீட்டு விட்டேன். போலின் யுகத்தை நிறுத்திவிட்டேன். பொருட் தட்டுப்பாடுகள் இல்லை. என்கின்ற கானல் நீர் கதைகளை பேசுவதன் மூலம் தானே நிகரில்லா தலைவன் எனும் மாயையை காட்ட முனைகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் எம் எம் மஹ்தி தெரிவித்தார். கிண்ணியாவில் உள்ள கட்சி கிளை காரியாலயத்தில் இன்று (31)மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்

இந்த நிலைமையை சீர் செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமும் பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா போன்ற நாடுகளிடமும் அதிக பணத்தை கடனாக பெற்று கடன் சுமையை மேலும் அதிகரித்து சாதித்து இருக்கின்றார். கடன் மேல் கடன் படுகின்ற போது அதனை மீளச் செலுத்த முடியாத ஒரு இக்கட்டான நிலை ஏற்படுவதோடு எமக்கு சொந்தமான அரச நிறுவனங்களை, காணிகளை வெளிநாடுகளுக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது. இவ்வாறே இலங்கை பெட்ரோலியம் டெலிகொம் போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு அடாத்தாக வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இது உண்மையான மாற்றமோ அபிவிருத்தியோ அல்ல. இந்த நாட்டை ஊழல் மோசடிகளால் நாசம் செய்த கொள்ளையர்களையும் இனவாதிகளையும் பாதுகாக்கின்ற ஒரு கூடாரமாகவே ரணிலின் தலைமை காணப்படுகின்றது. பெரும் பெரும் ஊழல் மோசடிகளால் கொள்ளையடிக்கப்பட்ட மோசடி செய்யப்பட்ட உடைமைகளும் சொத்துகளும் பணங்களும் மீள நாட்டின் தேசிய வருமானத்தில் இணைக்கப்படுகின்ற போதுதான் உண்மையான அபிவிருத்தியை காண முடியும். இதற்கு ரணில் என்கின்ற தலைமை எந்த வகையிலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. அனுரகுமார திசாநாயக்க என்பவர் நன்றாக பேசக் கூடியவர். பேச்சால் மக்களை கவரக்கூடியவர். எதிர்க்கட்சியிலே இருந்து கொண்டு வெறும் வாய் பேச்சினால் மட்டும் இளைஞர்களையும் நாட்டு மக்களையும் கவர்ந்து கொண்டிருக்கின்றார். அவரால் இதுவரை ஆக்கபூர்வமான எந்த ஒரு வேலை திட்டமும் நாட்டிற்கோ மக்களுக்கோ செய்யப்படவில்லை. NPP க்கு தேர்தல் செலவுகளுக்காக வெளிநாட்டு நிதி அனுசரனைகள் கிடைக்கின்றன. பிரச்சாரத்திற்கு அதிக பணத்தை செலவு செய்கின்றார்கள். கூடுதலான விளம்பரங்களை செய்கின்றார்கள். ஆனாலும் கடந்த கால அனுபவங்களை ஒப்பிடுகின்ற போது சனம் திரண்டாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாசா அவர்கள் பாடசாலைகளுக்கு பஸ்களையும் ஸ்மார்ட் வகுப்பறைகளையும், வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களையும் பல்வேறு இன்னோரென்ன வேலை திட்டங்களை ஆக்கபூர்வமாக செய்து வந்திருக்கின்றார். எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை நிர்வகிப்பதற்கு சிறந்த நிபுணத்துவம் கொண்ட புத்திஜீவிகள் குழு காணப்படுகின்றது. ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை சட்ட நடவடிக்கையின் மூலம் மீட்டெடுப்பேன் எனும் அறைகூவலை சஜித் பிரேமதாச முன்மொழிகின்றார். எனவே வாக்களிக்கின்ற போது இந்த நாட்டை மீட்டெடுத்து உற்பத்தியை அதிகரித்து வளமான அபிவிருத்தியையும் நாட்டையும் உண்டாக்குவதற்கு சஜித் பிரேமதாச அவர்களை வெற்றி பெறச் செய்து ஜனாதிபதியாக நிலை நிறுத்த வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கிறேன். எதிர் வருகின்ற 5ம் 6ம் திகதிகளில் நடைபெற இருக்கின்ற தபால் மூல வாக்களிப்பின் போது அரச ஊழியர்களும் அதிகாரிகளும் ஒரு இன, மத, குல பேதங்களுக்கப்பால் சிறந்த தலைவனாக மிளிருகின்ற சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கன்னியமாக கேட்டுக் கொள்கின்றேன்.