பொய்யாமொழிப் புலவர் உலக பொதுமறையை எமக்கு அளித்த திருவள்ளுவரின் திருவுருவச்சிலையானது அரசடி சுற்று வட்டத்தில் இன்று கிழக்குமாகாண ஆளுனரினால் திரைநிக்கம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் விசேட விருந்தினர்களாக மலேசிய நாட்டு முன்னால் அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன், கிழக்கு பல்கலைகழக துணை வேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்னாயக, கல்வி அமைச்சின் செயலாளர் திஷாநாயக, கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் நவநீதன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் சிவலிங்கம், கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தமிழின் கலை கலாசார பண்பாட்டை பிரதிபலிக்கும் கண்கவர் நிகழ்வாக கோலாட்டம், கும்மி, காவடி போன்ற பல நடனங்களுடன் பாரம்பரிய விடயங்கள் அடங்கிய அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் கொண்ட பண்பாட்டு ஊர்வலமானது திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட இடத்திலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு வெபர் மைதானம் வரை சென்றடைந்தது.
இதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி இசைக் கச்சேரி, நடனங்கள், சிறப்பு உரைகள் என்பன இடம் பெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக உலக தமிழ் கலை இலக்கிய மாநாட்டின் கருத்தரங்க தலைவர் முனைவர் க.சுபாஷினி அவர்களால் மாநாட்டு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு ஆய்வு நூல் வெளியீடு மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ சி.சரவணன் அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் அவற்றின் பிரதிகள் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து உலக தமிழ் கலை இலக்கிய மாநாட்டை முன்னிட்டு சிறப்பு முத்திரை ஒன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வின்சென்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் பிரதான மண்டபத்திலும், வில்லியம் ஓல்ட் மண்டபத்திலும் பி.ப 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆய்வரங்கம் இடம் பெறவுள்ளதுடன் இதல் பங்கேற்க உலக நாடுகளில் இருந்து அதிகளவிலானோர் கலந்து கொண்டுள்ளனர்.
அதேவேளை இரண்டாம் நாள் நிகழ்வுகள் மூன்று அமர்வுகளாகவும் அத்தோடு ஓவியக் கண்காட்சியும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமுலை வளாகத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.