8 மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்.

(ரவ்பீக் பாயிஸ்) கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 24ஆம் திகதி முதல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக 8 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்று  (29) திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். 
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தாம் தொடர்ச்சியாக போராடி வருகின்ற நிலையில், இற்றைவரை இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமது விடயத்தினை பொறுத்தவரையில் தீர்வு எதுவும் கிடைக்கப் பெறாத நிலையில் தமக்கு இலங்கை அரசின் மீது  நம்பிக்கை இல்லை என்பதனை இதன்போது வலியுறுத்தியிருந்தனர்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்
தங்களுடைய பிள்ளைகள் உயிருடன் இருக்கும் போது எங்களை மிரட்டி விசாரணை செய்வதற்காக அழைத்து சென்று இன்று வரை திருப்பி அனுப்பப்படாமல் அதற்கான மரண சான்றிதழ், நிவாரணம் வழங்குவதாக தொடர்ச்சியாக இந்த அரசாங்கம் வலியுறுத்தி வருவதாகவும்,
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக OMP, TRC மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு என்பன தீர்வாக அமையாது எனவும் தமக்கு இலங்கை அரசினால் நிறுவப்படும் இந்த குழுக்கள் மீது நம்பிக்கை இல்லை எனவும் தொடர்ச்சியாக சர்வதேச விசாரணை வேண்டுமென வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக இவ்வாறான போராட்டங்கள் மூலமாக அரசிடம் தெரிவித்து வரும் நிலையில்.சர்வதேச சமூகத்தின் பார்வையில் தமது போராட்டம் பேசு பொருளாக மாறிஉள்ளது எனவே தமது தேடுதலுக்கான முடிவினை விரைவினில் பெற்றுத்தர சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.