43 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட சங்கர்புரம் பாடசாலை வீதி இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப்பிரதேசத்திற்கு இன்றயத்தினம் விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.

முதலில் சங்கர்புரம் பாடசாலை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கொங்றீட் வீதியாக புனரமைக்கப்பட்ட ஒரு கிலோ மீற்றர் வீதியைத் திறந்து வைத்து அப்பகுதி மக்களின் குறை நிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.பின்னர் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள வாயிற் கோபுரத்திற்குரிய அடிக்கல்லை நட்டு வைத்தார். தொடர்ந்து வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேச செயலகத்தில் வைத்து அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பாலையடிவட்டை, மற்றும் சின்னவத்தை ஆகிய இரு பாடசாலகளுக்கும் தலா ஒவ்வொரு நிழற்பிரதி எடுக்கும் இயந்திரங்களையும் வழங்கி வைத்தார்.

இதன்போது போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், பாடசாலைகளின் அதிபர்கள், கல்விச் சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.