ஏழை விவசாயிகளுக்கு காணிகள் வழங்கி 30 வருடங்கள் கடந்தும் ஆவணங்கள் கையளிக்கப்படவில்லை.

 ( வாஸ் கூஞ்ஞ) காணியற்ற நூறு ஏழை விவசாயிகளுக்கு காணிகள் வழங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இந்த ஏழை விவசாயிகளுக்கு இதுவரை காணிக்குரிய ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை ஆகவே அண்மையில் மன்னாருக்கு வரவீருக்கும் ஜனாதிபதி இவர்களின் காணிகளுக்கான ஆவணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும என மன்னார் மாவட்டம் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மன்னார் மாவட்டம் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது

கடந்த முப்பது ஆண்டுகளாக மாந்தை மேற்கு இலுப்பைக்கடவை சோழமண்டல குளத்தின் கீழ் காணியற்ற நூறு ஏழை விவசாயிகள்  பயிற்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

இவர்களுக்கு இதுவரை காணிக்குரிய ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. நான்கு ஜனாதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடைபெறவில்லை.

ஏதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி மன்னார் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதாக அறிகிறோம்.

எனவே மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருவதற்கு முன்னதாக இவர்களுக்கு காணி வழங்கும் உத்தரவை வழங்கிவிட்டு வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

காணி சீர்திருத்த அதிகார சபையானது முறைகேடான முறையில் காணி வழங்கி வருகின்றது என்பது எமக்கு தெரியவருகின்றது.

இவ்விவசாய காணிகள் தொடர்பாக பல ஆண்டுகளாக பல வழிகளிலும் வேண்டுகை விடுத்தும் அதிகாரிகள் செவி சாய்ப்பதாக இல்லை

இது தொடர்பாகவும் தங்களுக்கும் ஏற்கனவே மூன்று தடவை கடிதம் எழுதியிருந்தோம் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

இந்த நாட்டில் சமூக சம நீதி என்பது எந்த விடயத்திலும் நடைமுறைப்படுத்துவதாகத்; தெரியவில்லை

இலஞ்சமும் ஊழலும் வியாபித்துள்ளது. அதனால் தான் இந்த நாடு இவ்வளவு மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் மீள முடியாமல் சிக்கித் தவிக்கிறது

எனவே மன்னாருக்கு வருவதற்கு முன்னர் இக்காணி வழங்குவதற்குரிய அனுமதியை அதிகாரிகளுக்கு வழங்கி விட்டு வருமாறு கேட்டுக் கொள்வதுடன். இந்த காணி வழங்குவதில் எந்தவிதமான சட்ட ரீதியான தடைகளும் இல்லை

குறிப்பாக வனத்திணைகளத்தினதோ, வனவிலங்குகள் திணைக்களத்தினதோ, தொல்பொருள் திணைக்களத்தினதோ இல்லை

அலுவலக நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாக சகல ஆவணங்களும் பல வருடங்களுக்கு முன்பே காணி சீர்திருத்த அதிகார சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆகவே இதற்கு தாங்கள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகின்றோம் என மன்னார் மாவட்டம் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

(வாஸ் கூஞ்ஞ)