புத்தளம் மாவட்ட பொதுவான பிரச்சினைகள் குறித்து வடமேல் மாகாண ஆளுனர் தலைமையில் கலந்துரையாடல்

(எம்.எம்.ஜெஸ்மின்)
புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள்  எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடலொன்று, குருநாகல் நகரில் அமைந்துள்ள மாகாண ஆளுனர் அலுவலகத்தில்,  வடமேல் மாகாண ஆளுனர்  நஸீர் அஹமட் தலைமையில்  நடைபெற்றது
இதன்போது புத்தளம் தள மருத்துவமனையின் பௌதீக மற்றும் ஆளணி வளப்பற்றாக்குறை குறித்தும், கல்வி , மருத்துவம், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் புத்தளத்துக்கான நிதி ஒதுக்கீடுகளின் குறைபாடுகள் குறித்தும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த பிரமுகர்கள்,  கருத்துக்களை முன்வைத்திருந்தனர்
புத்தளம் மாவட்டத்தின் தலைநகரமாக புத்தளம் நகரம் காணப்பட்டபோதிலும் நாத்தாண்டிய, சிலாபம் , மாரவில போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் புத்தளம் நகரில் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது
புத்தளம் நகர மருத்துவமனையானது புத்தளம், முந்தல், கல்பிட்டிய வரையான பிரதேசங்களில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் முப்படையினருக்கு மருத்துவ வசதிகளை வழங்குகின்ற போதிலும்,   புத்தளம் மருத்துவமனை ஏ தரத்திலான தள மருத்துவமனையாக இருந்தாலும் ஆதார மருத்துவமனைகளில் காணப்படும் வசதிகள் கூட அங்கு காணப்படுவதில்லை என்றும், இருதயநோய் சிகிச்சைப்பிரிவு எதுவித வசதிகளும் அற்ற சாதாரண சிறிய அறையொன்றுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கல்வித்துறை மட்டுமன்றி உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட  அனைத்து விடயங்களிலும் இதே புறக்கணிப்பு தொடர்வதாகவும் கௌரவ ஆளுனரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.