(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் தீவில் கடந்த 25 வருடங்களுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட யோசவ்வாஸ் நகரில் 400 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றபோதும் இங்கு மிகவும் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படாது இருப்தாக மன்னார் அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட செயலாளராக கடமையேற்று முதன்முதலாக ஜோசப்வாஸ் நகர் பங்கிற்கு ‘மக்கள் குறை கேள்’ என்ற செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கனகசபாபதி கனகேஸ்வரன் சென்றிருந்த பொழுது அங்கு பங்குத் தந்தை அருட்பணி எஸ். இராஜநாயகம் அடிகளார் தலைமையில் பெரும் வரவேற்பு இடம்பெற்றது.
வியாழக்கிழமை (25) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அங்குள்ள மக்களால் 11 அத்தியாவசிய தேவைகள் அரச அதிபரிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.
மக்களின் குறைகளைக் கேட்டறிந்த அரசாங்க அதிபர் விளையாட்டு மைதானம் , ஆலய வளாகம் , கிராமத்தின் வீதிகள் , மற்றும் முதியோர் சங்கம் என்பவற்றைப் பார்வையிட்டார்.
இந்த பகுதியில் 25 வருடங்களாக வாழந்து வரும் 400 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் போதிய வசதிகள் இன்மையால் முகம் கொடுத்து வரும் அசௌகரியங்கள் தேவைப்பாடுகள் பொதுமக்களால் முன் வைக்கப்பட்டது.
குறித்த கிராமத்தில் அறுபதிற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் வசித்து வருகின்றனர். சிறந்த மாணவர்கள் , விளையாட்டு வீரர்கள் என பல மக்கள் வாழ்ந்து வரும் இன்நகரில் போதியளவான அபிவிருத்திகள் செய்யப்படவில்லை எனவும்
தொண்ணூறு வீதமான மாணவர்கள் கல்வி பயின்றும் இந்த நகருக்கென்று பாடசாலை ஒன்று இல்லாமையால் மாணவர்கள் தோட்டவெளி கிராமத்திற்குச் சென்றே கல்வி கற்கும் நிலை காணப்படுகிறது.
மன்னார் தீவுக்குள் வாழும் இவர்களுக்கு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் இக்கிராம மக்களுக்கான ஒரு மீன்பிடித் துறை இதுவரையில் வழங்கப் படவில்லை.
மக்கள் தங்களுடைய சொந்த பணத்திலிருந்தே பல அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் அதற்கான அனுமதி பெற்றுக் கொள்தலில் உள்ள சிக்கல் நிலை போன்றவை அரச அதிபரிடம் முன்வைக்கப்பட்டது.
மக்கள் குறைகளைக் கேட்டறிந்த அரச அதிபர் கூடிய விரைவில் இதற்கான தீர்வினைப் பெறுவதற்கு தன்னாலான பணிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
பங்குத் தந்தை அருட்பணி இராஜநாயகம் அடிகளாரின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட உதவிச் செயலாளர் டிலுஷன் பயஸ் , மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திவாகரி , மன்னார் மறை மாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்பணி விக்டர் சோசை அடிகளார் , அருட்பணி டெனிக்கலிஸ்ரஸ் அடிகளார் , அருட்பணி டெஸ்மன் அஞ்சலோ அடிகளார் , கிராம உத்தியோகத்தர் , அபிவிருத்தி அலுவலர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கிராமத்திற்கு முதன் முறையாக விஜயம் செய்ததன் ஞாபகார்த்தமாக அரச அதிபருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் இப்பகுதி மக்கள் சார்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)