பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக புவனேந்திரன் பதவியேற்பு.

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளரான செல்லத்துரை புவனேந்திரன் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக( மேலதிக)  செவ்வாய்க்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏலவே பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளராகவிருந்த ரி.சிறிதரனுக்கு எதிராக அண்மைக் காலமாக அங்கு தொடர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்தமை தெரிந்ததே.
அதனைத் தொடர்ந்து அவர் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் இணைக்கப்பட்டுள்ளார்.
கல்முனை வலய கல்வி பணிப்பாளராக இருந்த
 செல்லத்துரை புவனேந்திரன் கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக  நியமிக்கப்பட்டு கடமையாற்றி கொண்டு வந்தவேளை அக்கடமைக்கு மேலதிகமாக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று 16,செவ்வாய்க்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றார்.
 இலங்கை கல்வி நிருவாக சேவை தரம்1 அதிகாரியான புவனேந்திரனுக்கான நியமனக்கடிதம்  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டது.
காரைதீவைச்சேர்ந்த இவர் ,2009.09.09இல் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியில் ஆசிரிய நியமனம்பெற்றதுடன் கல்விச்சேவையில் இணைந்துகொண்டார்.
அரச சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின்படி இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் வகுப்புக்கு 2021.03.23 முதல் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் 2009 இல் இலங்கை கல்வி நிருவாக சேவையில் இணைந்து கல்முனை கல்வி வலயத்தில் கடமையாற்றிய பின்னர் ,2010 முதல் 2018 வரை சம்மாந்துறை கல்வி வலயத்தில் கல்வி அபிவிருத்தி திட்டமிடல்நிர்வாகம் போன்ற பிரிவுகளில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி, 2019 இல் மீண்டும் கல்முனை வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்று 2020.04.16 முதல் கல்முனை கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்திருந்தார் .
இவர் ஆரம்பக்கல்வியை காரைதீவு இ.கி.மிசன் ஆண்கள் பாடசாலையிலும் ,இடைநிலைக்கல்வியை விபுலாநந்த மத்தியகல்லூரியிலும் ,கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியிலும் பயின்று, கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப்பட்டதாரியாகி ,பிரான்சில் தனது கல்வித்திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தில் முதுநிலைமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.