( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் துவி வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் புதுவருடத்தில் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது .
உற்சவகால பிரதம குரு சிவாகமவித்யா பூஷணம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா சமுகத்தில் வருஷாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகவுள்ளன.
தொடர்ச்சியாக ஒன்பது தினங்கள் பகல் அலங்கார உற்சவ திருவிழாக்கள் இடம் பெற்று எதிர்வரும் 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சித்ரா பௌர்ணமி அன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது .
19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாற்குட பவனி இடம் பெற ஏற்பாடாகி உள்ளது.
இந்த பத்து நாள் அலங்கார உற்சவ திருவிழாக்காலங்களில் காலை 10 மணிக்கு கும்ப பூஜையுடன் ஆரம்பமாகி பகல் ஒரு மணிக்கு அலங்கார உற்சவ பிரதான பூஜை, அம்பாளின் வீதியுலா இடம் பெறும். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படும் . இரவு நேர பூஜை திருவிழாக்கள் இடம்பெறமாட்டாது என்று ஆலய பரிபாலன சபைத் தலைவர் கலாநிதி கே. ஜெயசிறில் தெரிவித்தார்.
பத்து தினங்களுக்கான உற்சவகால திருவிழாக்களையும் அன்னதானத்தையும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பிரதேசங்களான சம்மாந்துறை விநாயகபுரம் பொத்துவில் ஆலையடிவேம்பு நாவிதன்வெளி கல்முனை காரைதீவு நிந்தவூர் திருக்கோவில் ஆகிய கிராமங்கள் பொறுப்பேற்று நடாத்துகின்றன.