(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) தேசியரீதியில் தொற்றாநோய்களை தடுக்கும் நோக்கத்துடன் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஆரோக்கிய மாதத்தினை முன்னிட்டு (07) திகதி மட்டக்களப்பில் மாபெரும் நடைபவனி ஒன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நடைபவனிக்கு பிரதம அதிதிகளாக வடமாகாண சுகாதார அமைச்சின் (பதில்) பணிப்பாளரும், யாழ்ப்பாண வைத்தியசாலையில் பணிப்பாளருமாகிய வைத்திய கலாநிதி ரீ.சத்தியமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், முன்னால் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளரும் தற்போதைய வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் என பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.
மாவட்ட மக்களின் உடல், உள நல மேம்பாட்டை கருத்திற் கொண்டு முன்னால் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளரும் தற்போதைய வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் அவர்களின் எண்ணக்கருவில் உதித்த திட்டத்திற்கு அமைவாகவே இன்று திறந்து வைக்கப்பட்ட திறந்த வெளி உடற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.